2ம் ஜான் பால் குறித்த பிபிசி செய்தி சரியான "ஜோக்".. போலந்து நூலகம்
வார்சா: மறைந்த போப்பாண்டவர் 2ம் ஜான் பால் குறித்த பிபிசியின் செய்தி காதலர் தின ஜோக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று போலந்து நாட்டு தேசிய நூலகம் தெரிவித்துள்ளது. அதைத் தவிர இதில் எந்த விஷயமும் இல்லை, உண்மையும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.
2ம் ஜான்பாலுக்கும் போலந்து நாட்டில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறியவருமான அன்னா தெரசா என்ற பெண்மணிக்கும் இடையே 32 வருட காலம் ரகசிய உறவு இருந்ததாக பிபிசி டாக்குமெண்டரி ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலந்து தேசிய நூலகத்திலிருந்து பெறப்பட்ட சில இதுவரை வெளிவராத ஜான்பாலின் கடிதங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை பிபிசி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்தக் கூற்றை போலந்து தேசிய நூலகம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து போலந்து தேசிய நூலகத்தின் இயக்குநர் டோமஸ் மகோவ்ஸ்கி கூறுகையில், இது சரியான காதலர் தின ஜோக். அவ்வளவுதான் இதற்கு மதிப்பு. ஜோக் என்பதை விட மோசமான ஜோக் என்றுதான் கூற வேண்டும் என்று அவர் கூறினார்.
ஆனால் பிபிசி ஒளிபரப்பிய டாக்குமெண்டரியில் போப்பாண்டவராவதற்கு முன்பு கரோல் வோஜ்டிலா என்ற இயற்பெயருடன் கர்டினாலாக ஜான்பால் வலம் வந்தபோது இந்த உறவு உருவானதாகவும் பிபிசி செய்தி கூறுகிறது. கிட்டத்தட்ட 350 கடிதங்களை ஆராய்ந்து இந்த தகவல்களை வெளியிடுவதாகவும் பிபிசி கூறியுள்ளது.
1973 முதல் 2005ம் ஆண்டு ஜான்பால் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் வரை அது மேற்கோள் காட்டியுள்ளது. ஆனால் இதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார் மகோவ்ஸ்கி. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், போலந்து போலீஸார், அனைத்துப் பாதிரியார்களையும் தீவிரமாக கண்காணிப்பார்கள். அவர்களுக்கே தெரியாமல் மைக்ரோபோன் வைத்து கண்காணிப்பார்கள். எனவே ஜான் பால் விவகாரத்தில் பிபிசி கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை.
ஒருவேளை அப்படி ஏதாவது நடந்திருந்தால் அது நிச்சயம் போலந்து ரகசிய போலீஸாருக்குத் தெரிய வந்திருக்கும். பிபிசி செய்தியாளரால் அந்தத் தகவலை பெற முடியாமல் போனது ஏன் என்று கேட்டுள்ளார் மகோவ்ஸ்கி.
மேலும் அவர் கூறுகையில் அன்னா மற்றும் அவரது கணவர், குழந்தைகள் மீது ஜான்பால் மிகுந்த அன்பு செலுத்தினார். அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி கடிதமும் அனுப்பியுள்ளார். அது ஒரு நல்ல நட்பு. அதற்கு மேல் எதுவுமே இல்லை என்றார் மகோவ்ஸ்கி.
கடவுள் கொடுத்த வரம் என்று அன்னாவுக்கு எழுதிய கடிதத்தில் ஜான்பால் கூறியுள்ளதிலும் விசேஷம் இல்லை. அவர் தான் சந்திக்கும், பேசும் அனைவரிடமும் இந்த வார்த்தையைக் கூறுவார். தான் சந்திக்கும் மனிதர்களுடனான சந்திப்பு கடவுள் கொடுத்த வரம் என்ற அர்த்தத்தில் அவர் கூறுவார். இதைத் தவறாகப் புரிந்து கொண்டால் எப்படி என்றார் மகோவ்ஸ்கி.