விமானியை காப்பாற்ற பெண் தீவிரவாதியை விடுவிக்க ஜோர்டான் அரசு சம்மதம்
அம்மான்: தங்கள் நாட்டு விமானியை உயிருடன் ஒப்படைத்தால் பதிலுக்கு சிறையில் இருக்கும் தீவிரவாதி சாஜிதா அல் ரிஷாவியை ஒப்படைப்பதாக ஜோர்டான் அரசு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜப்பானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கெஞ்சி கோட்டோ, ஜோர்டானைச் சேர்ந்த விமானி மாவோஸ் அல் கசாஸ்பே ஆகியோரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை விடுவிடுக்குமாறு அவர்களின் பெற்றோர் தீவிரவாதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிராவாதிகள் விமானியை விடுவிக்க வேண்டும் என்றால் ஜோர்டான் நாட்டு சிறையில் இருக்கும் தீவிரவாதி சாஜிதா அல் ரிஷாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி 24 மணிநேர அவகாசம் அளித்துள்ளனர்.
2005ம் ஆண்டு ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர் சாஜிதா.
இது குறித்து ஜோர்டான் அரசு செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,
விமானிக்காக சாஜிதாவை விடுவிக்க தயாராக உள்ளோம். ஆனால் அவர்கள் விமானியை உயிருடன் ஒப்படைக்கும் வரையில் சாஜிதாவை அவர்களிடம் ஒப்படைக்க மாட்டோம். சாஜிதா ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார்.
இதற்கிடையே ஜப்பானிய பத்திரிக்கையாளர் எப்பொழுது விடுவிக்கப்படுவார் என்று தெரியவில்லை.