ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தற்கொலைப் படை தீவிரவாதியான ஜோர்டான் எம்.பி. மகன்
அம்மான்: ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகளில் ஒருவர் ஜோர்டான் நாட்டு எம்.பி.யின் மகன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜோர்டான் நாட்டு நாடாளுமன்றத்தில் சுயேட்சை எம்.பி.யாக இருப்பவர் மஜேன் அல் தலாயீன். அவரது 23வயது மகன் முகமது உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வந்தார்.
அங்கு மாணவி ஒருவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். பின் அவரையும் இஸ்லாம் மதத்துக்கும் மாற்றியும் இருக்கிறார்.
#Jordan | Independent legislator Mazen Al Dhalaein confirms the death of his son carrying out a suicide attack. pic.twitter.com/Jk5D8lWT0j
— Zaid Benjamin (@zaidbenjamin) October 2, 2015
இதனைத் தொடர்ந்து அண்மையில் உக்ரைனில் இருந்து வெளியேறி ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் அவர் இணைந்துவிட்டார். ஐ.எஸ். இயக்கத்தில் அவருக்கு அபு பாரா என புனைபெயர் கொடுக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரம் ஈராக்கின் ரமாதி நகரில் காரில் வெடிகுண்டுகளை நிரப்பி பயங்கர தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை நடத்திய மூவரில் ஜோர்டான் நாட்டு எம்.பி.யின் மகனும் ஒருவர் என்ற தகவல் வெளியானது.
இதை எம்.பி. மஜேன் அல் தலாயீனும் உறுதி செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ஐ.எஸ். இயக்கத்தில் இணையும் முடிவை எங்களிடம் அவன் தெரிவித்தான். நாங்கள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அதை மீறி சென்றுவிட்டான். தற்போது உயிரிழந்துவிட்டான் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் முறைப்படியான இறுதி சடங்குகளை வீட்டில் நடத்திவருகிறோம் எனக் கூறியுள்ளார்.
ஜோர்டானைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.