ஜூலியன் அசாஞ்சே ஒரு அப்பாவி.. ரொம்ப நல்லவர்.. சிறையில் சந்தித்த பின் பமீலா ஆண்டர்சன் பேட்டி
லண்டன்: முன்னாள் பேவாட்ச் நடிகையான பமீலா ஆண்டர்சன், கைது செய்து லண்டன் பெல்மாஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவே சந்தித்து பேசியுள்ளார்.
சிறையில் ஜூலியன் அசாஞ்சேவே சந்தித்து வந்த பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை பமீலா சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜூலியன் அசாஞ்சே சிறையில் இருக்க வேண்டியவரே இல்லை.
சிறையில் அடைக்கப்படும் அளவிற்கு அவர் எந்த ஒரு வன்முறை செயலையும் செய்யவில்லை. அவர் ஒரு அப்பாவி என்று பமீலா கூறினார். மேலும் பேசிய அவர் ஜூலியன் அசாஞ்சேவை சிறை நிர்வாகம் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
வெளியுலக தொடர்புகளிடமிருந்து அவர் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளார் அவரது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் கூட அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லாமல் உள்ளது என பமீலா குறிப்பிட்டார்.
மேலும் பேசிய பமீலா, ஜூலியன் அசாஞ்சே நம்பமுடியாத அளவிற்கு மிகவும் நல்லவர். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன் அவருக்கு நடந்து வரும் நிகழ்வுகள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது என வேதனை வெளியிட்டார்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒன்றிலிருந்து தப்பிக்கவும், ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்கவும் ஏழாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார் அசாஞ்சே.
சர்வதேச விதிகளை ஜூலியன் அசாஞ்சே தொடர்ந்து மீறியதால், அவருக்கு தாங்கள் தஞ்சம் வழங்கியதை திரும்பப்பெறுவதாக ஈகுவேடார் நாட்டின் அதிபர் லெனின் மொரீனோ தெரிவித்தார். இதனையடுத்து அவரை கைது செய்த பிரிட்டன் போலீசார் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.