2 ஆண்டுகள் கழித்து ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் 'விக்கிலீக்ஸ்' அசாஞ்சே: சரணடைகிறார்?
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள வீக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விரைவில் போலீசாரிடம் சரணடைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பல திடுக்கிடும் உண்மைகளை உலகிற்கு தெரிவித்தவர் விக்கலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இங்கிலாந்துக்கு தப்பியோடிய அவரை பாலியல் வழக்கு தொடர்பாக தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு சுவீடன் கேட்டது. ஆனால் அசாஞ்சே இங்கிலாந்தில் உள்ள ஈக்விடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி அவர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.
ஒரு புறம் பல்வேறு முக்கிய ராணுவ விவகாரங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அசாஞ்சே பற்றி விசாரணை நடத்தி வருகிறது அமெரிக்கா. இந்நிலையில் அசாஞ்சே 2012ம் ஆண்டில் இருந்து தூதரகத்தை விட்டு வெளியேறவில்லை. அவர் மீது சூரிய ஒளியே படவில்லை. தூதரகத்திற்கு வெளியே 24 மணிநேரமும் போலீசார் நிற்கிறார்கள். அவர் மட்டும் வெளியே வந்தால் உடனே அவர் கைது செய்யப்படுவார். மேலும் சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவார்
இந்நிலையில் அசாஞ்சே செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை. இப்படி ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது எனது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. இங்கு தஞ்சம் அடைந்த காலத்தில் இருந்து நிறைய கஷ்டப்பட்டுவிட்டேன். விரைவில் தூதரகத்தை விட்டு வெளியேற உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டில் இருந்து ஒரே இடத்தில் சூரிய வெளிச்சம் இன்றி அடைந்து கிடக்கும் அசாஞ்சேவுக்கு இதய பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அவர் போலீசில் சரண் அடைய முடிவு செய்துள்ளார்.