ஐஸ்கட்டியால் ஆன வியாழனின் நிலா ‘யூரோப்பா’வில் உயிரினங்கள் வாழ முடியும்.. ஆய்வில் தகவல்
வியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: வியாழனின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரினங்கள் வாழ முடியும் என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நமது சூரிய மண்டலத்தில் பூமி உட்பட 8 கிரகங்கள் உள்ளன. இதில், நமது பூமி 3வது இடத்திலும், வியாழன் 5வது இடத்திலும் உள்ளது. பூமிக்கு துணை கிரகமாக நிலா உள்ளது போல், வியாழனிற்கு யூரோப்பா உள்ளது.
முழுவதும் ஐஸ்கட்டியால் ஆன இதில் உயிரினங்கள் வாழ முடியும் என பிரேசில் நாட்டில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் சமீபத்தில் வியாழன் கிரகத்தின் துணைக்கோளான யூரோப்பா குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், யூரோப்பாவின் பல அம்சங்கள் பூமியுடன் ஒத்துப் போவது தெரிய வந்தது.
அதாவது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் அருகே உள்ள போங்யங் என்ற தங்க சுரங்கத்தில் சுமார் 3 கிமீ ஆழத்தில் பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வது விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சூரிய ஒளி படாத கதிரியக்கங்கள் ஏற்படுவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.
யூரோப்பாவின் நிலப்பரப்பிலும் ஐஸ்படுகையின் 10 கிமீ ஆழத்தில் கடல் போன்ற தண்ணீர் மறைந்துள்ளது. இதன் அடிப்படையில், பூமியைப் போன்றே அங்கும் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருப்பதாக பிரேசில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் களாண்தே கூறுகையில், “பூமி உருவான ஆரம்ப காலத்தில் உயிர்கள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி இருந்தனவோ, அதே போன்று தான் இன்று யூரோப்பாவில் காணப்படுகிறது. இந்த ஆய்வின் மூலம் பூமியில் உயிர்களின் தோற்றம் எப்படி இருந்தது என்ற கடந்தகால வரலாற்றை நாம் அறிந்து கொள்ள இயலும்” என்கிறார்.