ஓ மை காட்... ‘கபாலி’யில் நடித்த 2 மலேசிய நடிகர்கள் திருட்டு வழக்கில் கைது!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த வெற்றிப்படமான கபாலியில் நடித்த மலேசிய துணை நடிகர்கள் இருவர் திருட்டு வழக்கில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர்: ரஜினி நடித்த கபாலி படத்தில் துணை நடிகர்களாக நடித்த நடிகர்கள் இருவரை திருட்டு வழக்கில் மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த வெற்றிப்படம் கபாலி. மலேசிய டானைப் பற்றிய இந்தக் கதையில் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. எனவே முக்கிய நடிகர்கள் போக மீதமுள்ள துணை நடிகர்கள் கதாபாத்திரத்தில் அங்குள்ள நடிகர்கள் நடிக்க வைக்கப்பட்டனர்.
அப்படியாக கபாலி படத்தில் துணை நடிகர்களாக நடித்த இரண்டு பேரை மலேசிய போலீசார் ஷா ஆலம் பகுதியில் கைது செய்துள்ளனர். திருட்டு வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
புச்சோங் மற்றும் சன்வே பகுதிகளில் பூட்டப்பட்ட வீடுகளில் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடி அதனை அடகு வைத்து வந்துள்ளனர் கைது செய்யப்பட்ட இருவரும். திருடப்பட்ட சில பொருட்களின் அடகு ரசீதுகளைப் போலீசார் அவர்களிடம் இருந்து மீட்டுள்ளனர்.
போலீசாரின் சோதனையில் கைது செய்யப்பட்ட துணை நடிகர்கள் இருவரும் போதை மருந்து உட்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.