அமைதிக்கான நோபலை இணைந்து பெற்றனர் இந்தியாவின் கைலாஷ் - பாகிஸ்தானின் மலாலா!
2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு குழந்தைகளின் உரிமைகளுக்காக பாடுபடும் டெல்லியில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பெண் கல்விக்காக குரல் கொடுக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று நடந்த விழாவில் அவர்கள் நோபல் பரிசை பெற்றுக் கொண்டனர்.
மலாலா மற்றும் சத்யார்த்தி 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.
முன்னதாக ஆஸ்லோவில் சத்யார்த்தி மற்றும் மலாலா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சத்யார்த்தி கூறுகையில், ஒரு குழந்தை ஆபத்தில் இருந்தாலும் அது மொத்த உலகமும் ஆபத்தில் இருப்பது போன்று தான் என்றார்.
மலாலா கூறுகையில்,
விருது, பதக்கத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு செல்ல நாங்கள் இங்கு வரவில்லை. உங்களின் உரிமைக்காக நீங்கள் தான் முன் வந்து குரல் கொடுக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெரிவிக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்றார்.
பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா 2012ம் ஆண்டு தாலிபான்களால் தலையில் சுடப்பட்டு மறுபிறவி எடுத்தார். அதன் பிறகு அவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.