14 கோடி மாணவர்களை சந்தித்த ஒரே ஜனாதிபதி கலாம்: துபாய் விழாவில் டாக்டர் பொன்ராஜ் பேச்சு
துபாய்: துபாய் முத்தமிழ்ச் சங்க கலை விழா கடந்த 22ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசர் டாக்டர். திரு. பொன்ராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கடந்த 22ம் தேதி மாலை 7 மணிக்கு துபாய் அட்மிரல் பிளாசா ஹோட்டல் அரங்கில் முத்தமிழ்ச் சங்க கலை விழா சங்க தலைவர் திரு. மோகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழா துவக்கத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இன்னிசை நிகழ்ச்சியில் செல்வி. ஷப்னம், திரு கிஷோர், திரு. சதகத், திரு கலையரசன் ஆகியோர் பாடி சபையினரை பரவசப்படுத்தினார்கள்.
திரு. ஷா வரவேற்புரை நிகழ்த்த டாக்டர். ராஜன் முன்னிலை வகுத்து பேசியபொழுது, டாக்டர் பொன்ராஜ் இந்தியாவிற்கு ஆற்றிய பணிகளை புள்ளி விவரங்களோடு பட்டியலிட்டது சபையோரை ஆச்சர்யப்படுத்தியதோடு அல்லாமல் மிகவும் ரசிக்கத்தக்கவாறு அமைந்தது. ஏற்புரை நிகழ்த்திய டாக்டர். திரு. பொன்ராஜ் பேசுகையில், இந்தியா நானோ தொழில்நுட்பத் துறையில் தனிப்பெரும் நாடாக உருவெடுத்து வருவதை தெளிவாக விளக்கினார். மேலும் அவர் பேசுகையில் 14 கோடி மாணவர்களை சந்தித்த ஒரே குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம் ஒருவர் தான் என்பதை தெளிவுப்படுத்தினார். மற்றும் விழாவில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த விதம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விழாவில் அபுதாபி நடராஜன், பாலாஜி நரசிம்மன், சிகாமணி, அஜய், மூன் டி.வி. சுரேஷ், ஹலோ எஃப்.எம். ராஜேஷ், ஷமீம், ஷாஃபி. ஆடிட்டர் நாகராஜன் ஆகியோர் டாக்டர்.பொன்ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்தனர். திரு. மோகன், திரு. ஷா ஆகியோர் திரு.பொன்ராஜ் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.
திரு. இதயத்துல்லா டாக்டர். பொன்ராஜ் சேவைகளை பற்றி கவிதையாக்கி வாசித்தது அரங்கினை சிறக்கச் செய்தது.. இறுதியாக திரு. அனிஸ் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். துவக்கம் முதல் இறுதி வரை விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய செல்வி. வருன்யா வெங்கட்டின் பாணி பாராட்டும் விதமாக அமைந்தது.