சுவிட்சர்லாந்தின் ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள் கோலாகலம்!
ஜெனிவா: சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரமான பெர்னில் அமைந்துள்ளது ஞானலிங்கேஸ்வரர் கோயில். தமிழர்கள் பெருவாரியாக வந்து வழிபடும் இக்கோயிலில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன.
சுவிட்சர்லாந்து, பெர்ன் நகரிலுள்ள ஞானலிங்கேஸ்வரர் ஆலயம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஞானலிங்கபாலன் கந்தசஷ்டி நோன்பு - திருக்கொடியேற்றத்துடன்:
12. 11. 2015 வியாழக்கிழமை முதல் 18. 11. 2015 புதன்கிழமை வரை நாளும் 16.00 மணிமுதல்
12. 11. 2015 வியாழக்கிழமை, 16.00 மணிமுதல், தெய்வத் தமிழ்த் திருக்கொடியேற்றம்
16. 11. 2015 திங்கட்கிழமை - திருமுருகுத்தேர்த்திருவிழா
17. 11. 2015 செவ்வாய்க்கிழமை - சூரன்போர் மாலை 17.00 மணிமுதல்
18. 11. 2015 புதன்கிழமை - பாறணை காலை 07.00 மணிமுதல் - திருக்கல்யாணம் மாலை 17.00 மணிமுதல்
முழுமுதற் கடவுள் ஞானலிங்கப்பெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து ஞானாம்பிகை சக்தியோடு தோன்றியவர் தமிழே முருகப்பெருமான் ஆவார். சூரனுடன் போரிட்ட பெருமான் அவனை ஒறுத்த நாள் கந்தசட்டியாகும்.
முருகப்பெருமானிற்கு பல்வேறு விழாக்கள் - வழிபாடுகள் இருப்பினும் அவை எல்லாவற்றிலும் சிறப்பானதாக இந்த சட்டி நோன்பு விளங்குகின்றது. 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' எனும் வழக்குமொழியின் பொருள்: சட்டியில் நோன்பு இருந்தால் கருப்பையில் சிசு தோன்றும் என்பதாகும். இந்நோன்பு காலத்தில் பெருமானை மனதார வேண்டினால், தடையின்றிக் குழந்தைப் பேறினை ஞானலிங்கபாலன் முன்வந்து அருள்வான் என்பது ஆன்றோர் வாக்கு.
இப்பெரும் நோன்பு, தமிழுக்கு கழகம் கண்டபெருமான் அருளாட்சியில், தெய்வத் தமிழ் வழிபாடு சிறந்தோங்கும் செந்தமிழ்த் திருக்கோவிலாம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் 12. 11. 2015 வியாழக்கிழமை, 16.00 மணிமுதல், தெய்வத் தமிழ்த் திருக்கொடியேற்றத்துடன் கொடிக்கவிபாடி நற்தமிழில் நடைபெறக் குருவருள் திருவருள் நிறை கைகூடியுள்ளது.
ஞானலிங்கேச்சுரர் இன்பமடிப் பாலகன், ஞானவள்ளிக்குஞ்சரி உடனாய தெய்வானை மணாளன் ஞானவடிவேலனிற்கு பெருமான் வடிவான தமிழாலே நாளும் சிறப்பு வேள்வியும், திருமுழுக்கு நீராட்டும், தெய்வத் தமிழ் வழிபாடுகளும் இடம்பெறும்.
• 16.11.2015 திங்கட்கிழமை 16.00 மணிமுதல் ஞானசக்திவேல் வழங்கும் விழா நடைபெறும். சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து 19.00 மணிக்கு ஞானலிங்கேச்சுரத்து ஞானவடிவேலன் ஞானமுருகுத் திருத்தேர் ஏறி ஞானத்திருவீதி திருவுலா வருவார்.
• 17.11.2015 16.00 மணிமுதல் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சூரன்போர் திருக்கோவில் முன்றல் ஐரோப்பாத்திடலில் நடைபெறும்.
• 18.11.2015 புதன்கிழமை காலை 06.00 மணிமுதல் சிறப்புவழிபாடுகள் இடம்பெற்று கந்தப்பெருமான் அடியார்களுக்கு சிவான்ன திருமுருகு அருளமுது வழங்கி கந்தசட்டி நோன்பு பாறணையுடன் நிறைவுறும். அன்றுமாலை 17.00 மணிமுதல் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று தெய்வானைத் தாயாருக்கும், வள்ளிக்குஞ்சரிக்கும் ஞானவடிவேல்பெருமானுடன் திருக்கல்யாணம் நடைபெறும்.
நோன்புக்காலத்தில் நாளும் வழிபாடுகளின் நிறைவில் அடியார்களுக்கு பால், பழம், அருளமுதுடன் பானாக்கம் வழங்கப்படும். ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கப்பெருமான் அருளும் ஞானலிங்கபாலன் திருவும் பெற்றுய்ய அழைக்கின்றோம். திருச்சிற்றம்பலம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.