ஐநா பொதுச்சபையில்... இம்ரான் கான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து... இந்திய பிரதிநிதி வெளிநடப்பு!!
ஜெனீவா: ஐநா பொதுச்சபையின் 75வது கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சைக் கண்டித்து இந்தியப் பிரதிநிதி வெளிநடப்பு செய்தார்.
ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட வீடியோ நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, ''உள்நாட்டில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகளை மறைக்கும் நோக்கத்தில் இந்தியா கவனத்தை திசை திருப்பி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்தை திருப்பியுள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். மசூதிகள் அழிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தைப் பயன்படுத்தி, மத துவேஷம் பரப்பப்பட்டு வருகிறது'' என்று பேசி இருந்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் குறித்து தனது பேச்சில் பேசி இருந்தார். இந்தியாவை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார்.
இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து ஐநாவுக்கான முதல் இந்திய செயலாளர் மிஜிதோ வினிடோ வெளிநடப்பு செய்தார்.
இதற்கு தனது ட்விட்டர் வாயிலாக ஐநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கண்டனம் தெரிவித்து இருந்தார். தனது கண்டனத்தில், ''பாகிஸ்தான் பிரதமரின் அறிக்கை 75 வது ஐ.நா பொதுச் சபையில் ஒரு புதிய ராஜதந்திர குறையாக அமைந்துள்ளது. அவரது பேச்சில் முழுக்க பொய்யாக உள்ளது. தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. போர் குணத்தில் பேசியுள்ளார். தனது சொந்த நாட்டில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். எல்லையில் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
#WATCH This is the same country that provides pensions for dreaded&listed terrorists out of State funds...We call upon Pak to vacate all those areas that it's in illegal occupation of: Mijito Vinito,First Secy,India Mission to UN exercises India's right of reply to Pak PM at UNGA pic.twitter.com/PiXDSZAYTJ
— ANI (@ANI) September 25, 2020
ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி இருந்தன. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்தது. ஆனால், இந்தியா இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை, அண்டை நாடுகள் தலையிடக் கூடாது என்று எச்சரித்து இருந்தது. மேலும், பலுசிஸ்தான் விஷயத்தை வைத்து பாகிஸ்தானுக்கு இந்தியா கொட்டு வைத்தது. தீவிரவாதத்தை வளர்க்கும் மற்றும் தீவிரவாதத்தின் மையமாக விளங்கும் நாடு மனித உரிமை பற்றி பாடம் பேசக் கூடாது என்று ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி செந்தில் குமார் தெரிவித்து இருந்தார். பாலுசிஸ்தானில் அடக்குமுறையால் மக்கள் பெரிய அளவில் இடம் பயர்ந்து வருகின்றனர் என்றும் தெரிவித்து இருந்தார்.