கேஸ் போடுவேன்: கத்ரா ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்ட பெண் விமானி மிரட்டல்
துபாய்: ஜம்முவில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்கு அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்ட பெண் விமானி உயிருடன் வந்துள்ளார்.
ஜம்முவில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்புகையில் கத்ரா என்ற இடத்தில் திங்கட்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த விமானி சுமிதா விஜயன் மற்றும் 6 பக்தர்கள் பலியாகினர். இந்நிலையில் சுமிதா விஜயன் உயிரோடு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சுமிதா விஜயனின் புகைப்படம் கிடைக்காத நிலையில் மீடியாக்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தேடி கேரளாவில் பிறந்து துபாயில் வசித்து வரும் வேறு ஒரு சுமிதா விஜயனின் புகைப்படத்தை எடுத்து தவறாக வெளியிட்டனர்.
இதை பார்த்த சுமிதாவின் உறவினர்கள் துபாய்க்கு போன் செய்து அவர் இறந்த செய்தியை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுமிதா கூறுகையில்,
வேறு ஒரு சுமிதா இறந்ததற்கு என் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனர். நான் அண்மையில் டெல்லிக்கு சென்றிருந்தேன். அதனால் என் உறவினர்கள் பயத்தில் போன் செய்தனர். நான் இன்னும் உயிருடன் தான் உள்ளேன்.
என் புகைப்படத்தை தவறாக வெளியிட்ட நாளிதழ்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடர்வேன் என்றார்.