நான் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானேன் - வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு குரல்
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
பாலியல் தாக்குதல்
இளம் வயதில் தாம் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் கெல்லயன் கான்வாய் கூறி உள்ளார். சி.என்.என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், இவ்வாறாக கூறி உள்ளார். இப்போது கான்வாய்க்கு 51 வயதாகிறது. முன்னதாக அவர் தன்னை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக கூறி இருந்தார்.
மோசமான சூறாவளி
மோசமான சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் ஜப்பானில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ட்ராமி சூறாவளி தாக்கியதில் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மேற்கு ஒசாகா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. மணிக்கு 216 கி.மீ வேகத்தில் சூறாவளி தாக்கியது. விமானம் மற்றும் ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டன. ஏறத்தாழ 7,50,000 வீடுகள் மின்சார சேவையை இழந்தன.
போராடும் பெண்கள்
பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னிலை போட்டியாளரான ஜேர் போல்சானாரோவுக்கு எதிராக லட்சகணக்கான பெண்கள் வீதியில் இறங்கி போராடி உள்ளனர்.'அவரை இல்லை' என்ற வார்த்தை தாங்கிய பதாகைகளை ஏந்தி, போல்சானாரோவுக்கு எதிராக பெண்கள் கோஷங்கள் எழுப்பினர். செப்டம்பர் 6-ம் தேதி ஓர் அரசியல் நிகழ்வின்போது கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜேர், பெண்கள், கருப்பினத்தவர், பாலியல் சிறுபான்மையினர் மீது மோசமான, தடாலடியான கருத்துகளைக் கூறி பிரபலமடைந்தவர்.
தூதரகத்தை மூடுவோம்
தெற்கு இராக் பாஸ்ரா நகரத்தில் உள்ள தமது நாட்டு தூதரகத்தை மூட இருப்பதாக அமெரிக்கா கூறி உள்ளது. இரான் துணையுடன் இயங்கும் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்கள்தான் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறி உள்ளது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவசரகால ஊழியர்கள் அனைவரும் பாக்தாத் பகுதிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறி உள்ளார்.
முன்னாள் அதிபர் பிணையில் விடுதலை
இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட மாலத்தீவின் முன்னாள் அதிபர் மெளமூன் அப்துல் கயூம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்ட எதிர்க்கட்சிகளின் கிளர்ச்சியை அடுத்து கயூம் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான முந்தைய செய்திகளை படிக்க:
பிற செய்திகள்:
- திருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கையா? -தடைகளை தகர்த்த பெண்ணின் கேள்வி #beingme
- இந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு 800க்கும் மேற்பட்டோர் பலி
- பென்குயின் குஞ்சை கடத்திய ஒரு பாலுறவு பென்குயின்கள்
- சுற்றுலா வாசிகளுக்காக காத்திருக்கும் கேரள படகு இல்லங்கள்