குறுகலான படிக்கட்டுகள்.. பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசல்.. 14 மாணவர்கள் பலியான சோகம்!
கென்யாவில் பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
நைரோபி: கென்யாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ளது ககமிகா நகர். இங்குள்ள தொடக்க பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் நிலையில் சம்பவத்தன்று மாலை பள்ளி நேரம் முடிந்து மாணவர்கள் வீட்டிற்குப் புறப்பட ஆயத்தமாகியுள்ளனர். அப்போது குறுகலான படிக்கட்டுகள் வழியாக ஒரே நேரத்தில் பல மாணவர்கள் வெளியேற முயற்சித்துள்ளனர். இதனால் அங்கு எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் பலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் மாணவர்களுக்கு மூச்சுத் திணறலும், காயமும் ஏற்பட்டது. 14 மாணவர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில், 'எதனால் அம்மாணவர்கள் சம்பவத்தன்று குறுகலான பாதை வழியாக ஓடி வெளியேற முயற்சித்தனர், அப்போது ஆசிரியர்கள் ஏன் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை' என பல கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கென்யாவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், அங்குள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு எப்போதுமே கேள்விக்குறியாக இருப்பதாகவும் அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு சோக சம்பவம் அங்கே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.