கென்யா தாக்குதல்: காணாமல் போன 20 குஜராத் மாநில குழந்தைகளின் கதி என்ன?
நைரோபி: கென்யா வணிக வளாகத் தாக்குதலில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 20 குழந்தைகளைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ‘வெஸ்ட் கேட் மால்‘ எனும் வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மதியம் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணுவத்தினர் பதில் தாகுதலில் ஈடுபட்டனர். நேற்று வரை நீடித்த இந்த கொடூரத் தாக்குதல் ஒரு வழியாக நிறைவு பெற்று விட்டதாக கென்ய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகள் சுட்டுக் கொலை....
11 தீவிரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளாதாகவும், 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பதாகவும் அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலியான பொதுமக்கள்....
அல்-ஷெபாப் என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய இந்தக் கொடூரத் தாக்குதலில் சிக்கி சுமார் 70 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாகப் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள்....
இத்தாக்குதலில் பெங்களூரைச் சேர்ந்த சுதர்சன் நாகராஜ் என்பவர் பலியானதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்ததையடுத்து, கென்யா தாக்குதலில் இறந்த இந்தியர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் குழந்தைகள்....
இதற்கிடையே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது வெஸ்ட்கேட் மாலில் இருந்தவர்களில் சுமார் 51 பேர் காணவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்களில் 20 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள்.
தேடும்பணி....
இதனால் நைரோபியில் வசிக்கும் குஜராத் மாநில மக்களிடையே பதட்டம் நிலவுகிறது. காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க இந்திய வெளியுறவுத்துறையும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
சமையல் போட்டி....
தாக்குதல் நடந்த வணிக வளாகத்தில் சனிக்கிழமை மதியம் சுமார் 500 குஜராத் இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்ற சமையல் போட்டி நடந்தது. அந்த சமயத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால் அதிக அளவில் குஜராத்தியர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
அமெரிக்கர்கள் தான் இலக்கு....
தீவிரவாதிகளின் இலக்கு அமெரிக்க நாட்டு மக்களே என்றும், இந்தியர்கள், இங்கிலாந்து நாட்டுக்காரர்களை அவர்கள் மிரட்ட மட்டுமே செய்ததாக சம்பவ இடத்தில் இருந்து உயிரோடு திரும்பிய சிலர் தெரிவித்துள்ளனர்.
சடலங்களைத் தேடும் பணி....
தற்போது வெஸ்ட்கேட் வணிக வளாகம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் வசம் உள்ளது. அங்கு சடலங்களைத் தேடும்பணி நடந்து வருகிறது.
3 நாள் துக்கம்....
தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கென்யா அரசு சார்பில் 3 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ஜனாதிபதி உருகென்யட்டா அறிவித்துள்ளார்.