சீனாவுக்கு சிக்கல்.. ரூ.24,193 கோடி ரயில்வே ஒப்பந்தம் சட்டவிரோதமானது.. கென்யா நீதிமன்றம் தீர்ப்பு
நைரோபி : கென்யாவிற்கும் சீனா சாலை மற்றும் பிரிட்ஜ் கார்ப்பரேஷனுக்கும் (சிஆர்பிசி) இடையே 24193 கோடி (3.2 பில்லியன் அமெரிக்க டாலர்) ரயில் ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று கென்யா மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கென்ய உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கென்யா ரயில்வே நாட்டின் சட்டத்தை பின்பற்றத் தவறிவிட்டது மற்றும் மீறிவிட்டது என்றும் கூறியுள்ளது.
கென்யாவின் ஆர்வலர் ஒக்கியா ஓம்தாதா மற்றும் கென்யாவின் லா சொசைட்டி, பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் சங்கம், ஆகியவை சீன நிறுவனத்தின் ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக 2014 இல் வழக்கை தொடர்ந்தனர். இந்த திட்டம் கென்ய ரயில்வேயின் ஒரு பொதுத் திட்டமாகும், இது நியாயமான, போட்டி மற்றும் வெளிப்படையான கொள்முதல் செயல்முறைக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடைபெறவில்லை என்று கோரி வழக்கு தொடர்ந்தனர்.
கென்ய வரி செலுத்துவோர் மீது கடன் திருப்பிச் செலுத்தும் சுமை இருந்தபோதிலும், இந்த ஒப்பந்தம் டெண்டருக்கு முன்வைக்கப்படாமல் ஒற்றைசாளர முறை பின்பற்றப்பட்டு இருப்பதாகவும் எனவே இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் திட்டத்திற்கு எதிராக வாதிட்டனர்.
என்னமோ நடக்கிறது.. மத்திய அமைச்சர்களை சந்திக்க போகும் ராணுவ தளபதி.. முக்கிய மீட்டிங்.. பின்னணி!
கென்ய நீதிமன்றம்
ஆனால் கென்யா உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டு வேதனை அடைந்த அவர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில் சீன நிறுவனத்திற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பில்கென்யா ரயில்வே நாட்டின் சட்டத்தை பின்பற்றத் தவறிவிட்டது மற்றும் மீறிவிட்டது என்றும் கூறியுள்ளது. ஆனால் திட்டத்தின் பெரும் பகுதி 2017ல் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. எனவெ கென்ய அரசாங்கமோ அல்லது சிஆர்பிசியோ தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தை நாட முடியும்.
ரயில பாதை அமைப்பு
மொம்பசா துறைமுகத்திலிருந்து நைரோபி வரை ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டில் சிஆர்பிசிக்கு வழங்கப்பட்டது. அதன் தாய் நிறுவனமான சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, பின்னர் நைரோபியில் இருந்து மத்திய பிளவு பள்ளத்தாக்கிலுள்ள நைவாஷா என்ற நகரத்திற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நீட்டிப்பு செய்ய முன்வந்தது.
பயணிகள் சேவை
இரண்டு திட்டங்களும் நிறைவடைந்து பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டில், சிஆர்பிசியின் துணை நிறுவனமான ஆப்பிரிக்கா ஸ்டார் ரயில்வே ஆபரேஷன் நிறுவனத்திற்கு எஸ்ஜிஆரில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாட்டின் மேற்கு எல்லையான உகாண்டாவில் அமைந்துள்ள மலாபா வரை ரயில் பாதையை நீட்டிக்க கென்யா திட்டமிட்டிருந்தது.
லாபம் வருமா
எனினும் முதல் இரண்டு கட்டங்களுக்கு நிதியளித்த எக்சிம் பாங்க் ஆப் சீனா, நிதி வெளியிடப்படுவதற்கு முன்னர் வணிக நம்பகத்தன்மைக்காக மலாபா நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு உள்ளதா என்று ஆய்வை மீண்டும் செய்யுமாறு கென்ய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது.
சீனாவிற்கு எதிர்ப்பு
கென்யா நாட்டின் பொருளாதாரத்தை ஆபத்தில் தள்ளிவிட்டுள்ளது கொரோனா தொற்றுநோய். இதனால் கென்யா தனது கடனை செலுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளதால் அரசாங்கம் இறக்குமதியாளர்களை பொருட்களை அனுப்ப ரயிலைப் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தி வருகிறது. இருப்பினும், லாரிகளுக்கு பதிலாக ரயில்வேயைப் பயன்படுத்துவது அதிக விலை என்று இறக்குமதியாளர்கள் எதிர்க்கிறார்கள். இந்த நிலையில் வழக்கில் சீன நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது.
நெருக்கடியில் கென்யா
முன்னதாக எஸ்ஜிஆர் திட்டத்தில் கடந்த ஆண்டு சரக்கு மற்றும் பயணிகள் ரயில் சேவைகளிலிருந்து 136 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்துள்ளது . இந்த மாத தொடக்கத்தில், கென்யா ரயில்வே 380 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிர்வாகக் கட்டணமாக ஆப்பிரிக்கா ஸ்டார் ரயில்வேக்கு (சீனாவுக்கு சொந்தம்) செலுத்தவில்லை என்று கென்ய நாடாளுமன்றம் கூறியது. நைரோபியில் உள்ள சீனத் தூதரகம், ஆப்பிரிக்கா ஸ்டார் ரயில்வேக்கு கட்டணத்தில் ஒரு பகுதி செலுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது, ஆனால் "நிலுவையில் உள்ள கடன்களை விரைந்து கொடுக்க கென்யா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டியது. பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள கென்யா சீன நிறுவனத்திடம் ரயில்வே துறையை தந்து கடன்களை அடைத்து வந்தது. இப்போது அதற்கு சிக்கல் எழுந்துள்ளது.