கென்ய வணிக வளாகம் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிட்டது: ட்விட்டரில் தகவல்
நைரோபி: தீவிரவாதிகளின் பிடியில் இருந்த வணிக வளாகம் தற்போது ராணுவத்தாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது கென்ய நாட்டு உள்துறை அமைச்சகம்.
கடந்த சனிக்கிழமை மதியம் கென்ய நாட்டின் நைரோபி நகரில் வெஸ்ட்கேட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் புகுந்தனர் ஷெபாப் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள். அங்கிருந்த பொதுமக்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு இந்தியர்கள் உட்பட 69 பேர் வரை பரிதாபமாக பலியானார்கள்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கென்ய பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து நான்காவது நாளாக நடந்து வரும் தாக்குதல் சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது, வணிக வளாகம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சம், டுவிட்டர் வலை தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘ தற்போது வணிக வளாகம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து பிணை கைதிகளும் விடுவிக்கப்பட்டு விட்டதாக நாங்கள் நம்புகிறோம் என கென்ய தேசிய பேரிடர் மீட்பு மையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.