துபாய் விமான விபத்தில் உயிர் தப்பிய கேரளா நபருக்கு லாட்டரியில் ரூ. 6 கோடி பரிசு
துபாய்: துபாய் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு,விபத்து நடந்த ஆறு நாட்கள் கழித்து ஆறு கோடி ரூபாய் லாட்டரிச்சீட்டில் பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற EK521 என்ற எமிரேட்ஸ் விமானம், துபாயில் தரை இறங்கிய போது விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது.
விமான நிலைய பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் அதிலிருந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.
இந்த விமானத்திலில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த காதர் என்பவர், உயிர் பிழைத்த ஆச்சர்யத்திலிருந்தே மீளாத நிலையில், அடுத்த ஆறு நாட்களில் மற்றொரு செய்தி அவரை மேலும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துபாயில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் கடந்த 37 வருடங்களாக பணியாற்றி வரும் காதர்,தனது சொந்த ஊரான கேரளாவுக்கு செல்லும் போது, விமான நிலையத்தில் லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.
கடந்த ரம்ஜான் பண்டிகைக்கு கேரளா சென்ற அவர்,அப்போது ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
லாட்டரி முடிவில் கவனம் செலுத்தாமல் மீண்டும் துபாய் திரும்பிய போதுதான் விமான விபத்தில் சிக்கி உயிர் தப்பித்திருக்கிறார்.
இந்நிலையில் விபத்து நடந்த ஆறு நாட்கள் கழித்து ,காதர் வாங்கிய லாட்டரிச்சீட்டின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இன்ப அதிர்ச்சியாக காதர் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு முதல் பரிசு விழுந்துள்ளது.இதன் பரிசுத்தொகை இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 68 லட்சமாகும்.
இந்த வருட இறுதியில் தனது பணியில் இருந்து ஓய்வுபெறப்போகும் அவர், இந்த பணத்தை கொண்டு கேரளாவில் உள்ள வசதியற்ற குழந்தைகளுக்கு உதவப்போவதாக தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் நான் உயிர் தப்பித்ததே கடவுள் எனக்கு கொடுத்த இரண்டாவது வாழ்க்கை. இந்நிலையில் வாழ்க்கையோடு சேர்த்து பெருமளவில் பணத்தையும் எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக இதைக் கொண்டு நல்ல விஷயங்களை செய்வேன் என்றும் காதர் தெரிவித்துள்ளார்.