அடித்தது சூப்பர் பம்பர்... அபுதாபியில் கேரள மாநிலத்தவருக்கு ரூ.20 கோடி பரிசு
துபாயில் உள்ள கேரள மாநிலத்தவருக்கு லாட்டரி குலுக்கலில் ரூ. 20 கோடி பரிசு விழுந்துள்ளது.
அபுதாபி: துபாயில் உள்ள கேரள மாநிலத்தவருக்கு லாட்டரியில் ரூ. 20 கோடி பரிசு விழுந்துள்ளதால் அந்த குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் நாயர் (42). இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் துபாயில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் துபாயில் லாட்டரி சீட்டை வாங்கினார். அதற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது.
அதற்கு 12 மில்லியன் திர்ஹாம், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 20 கோடி பரிசு கிடைத்துள்ளது. இந்த தகவலை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ஹரிகிருஷ்ணன், தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறுகையில் என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் இதற்கு முன்னரும் இதுபோன்று லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளேன். ஆனால் எனக்கு இதுவரை பரிசு கிடைத்ததில்லை.
இந்தப் பணத்தை கொண்டு உலகம் முழுவதும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. அறக்கட்டளை ஆரம்பித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும். கடவுளின் அருள் இருந்தால் அதை என்னால் செய்ய முடியும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கலில் தலா 1 மில்லியன் திர்ஹாம் வென்ற 10 நபர்களில், 8 பேர் இந்தியர்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கலில் இந்தியர் ஒருவர் 5 மில்லியன் திர்ஹாம் வென்றார்.