சவூதியில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய முதல் பெண்.. கேரளத்து நர்ஸ் சாரம்மா!
சவூதி அரேபியாவில் டிரைவிங் லைசன்ஸ் பெற்ற முதல் இந்திய பெண் சாரம்மா தாமஸ்.
பக்ரைன்: சவூதி அரேபியாவில் வாகனங்களை இயக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு பணியாற்றும் நர்ஸ் சாரம்மா தாமஸ் டிரைவிங் லைசன்ஸை பெற்றுள்ளதால் சவூதியில் லைசன்ஸ் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்.
சவூதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். ஊழலற்ற ஆட்சிக்காக அரசு அலுவலகங்களை கண்காணித்து வருகிறார்.
நேரில் பார்க்க
இவர் வந்த பிறகு சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதுபோல் இத்தனை ஆண்டுகள் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி இல்லை. ஆனால் முகமுது பின் சல்மான் கார் ஓட்ட அனுமதி கொடுத்ததோடு விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் பார்க்கவும் அனுமதியளித்தார்.
கேரள பெண்
இதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் கார் ஓட்ட பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் சவூதி அரேபியாவில் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை கேரள மாநிலத்தவர் பெற்றுள்ளார். இவர் கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்தவர்.
இந்திய லைசன்ஸ்
அவரது பெயர் சாரம்மா தாமஸ் ஆகும். இவர் சவூதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கெனவே இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளார். இந்நிலையில் சவூதியில் கார் ஓட்ட உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.
ஓட்டுநர் பயிற்சி
அவருக்கு கார் ஓட்டும் சோதனையும் கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் அவர் தேறியதால் அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது. இளவரசரின் உத்தரவை தொடர்ந்து ஊபர் உள்ளிட்ட கார்களின் டிரைவர் பணிக்காக சவூதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் கார் ஓட்ட பயிற்சி பெறுகின்றனர்.