விஷ எறும்பு கடித்தது... கேரளாவைச் சேர்ந்த பெண் சவுதியில் பலி!
ரியாத் நகரில் விஷ எறும்பு கடித்ததில் இந்தியப் பெண் உயிரிழந்தார்.
ரியாத்: சவுதி அரேபியாவில் விஷ எறும்புக் கடித்து கேரளப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அடூர் பகுதியை சேர்ந்தவர் சூசி ஜெஃப்பி (36). இவர் தனது குடும்பத்தாருடன் சவுதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத் நகரில் வசித்து வந்தார்.
கடந்த மாதம் 19ம் தேதி, வீட்டில் இருந்த சூசியை மிகவும் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ஒரு வகை எறும்பு கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உடல் முழுவதும் விஷம் பரவி, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எறும்பு கடித்து இந்தியப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில வகை எறும்புகள் அதிக விஷத்தன்மை கொண்டவை என்றும், அவை கடித்தால் உயிர் போகும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.