ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்.. அமைதிக்கான நோபல் பரிசுக்கு கெர்ரி, ஜாரீப் பெயர்கள் பரிந்துரை
வியன்னா: ஈரானுடனான வரலாற்று சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் உருவாவதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாரீப் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க சுவீடன் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக ஸ்டாக்ஹோம் இண்டர்நேஷன் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 20 ஆண்டுகளில் ஈரானுடனான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அணுசக்தி கட்டுப்பாட்டு ஒப்பந்தம் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் ஆக்கப்பூர்வமான அணுசக்தி திட்டங்களை செயல்படுத்தும்; அதன் மீதான பொருளாதாரத் தடைகள் நீங்கும்.
இந்த ஒப்பந்தம் உருவாகக் காரணமாக இருந்த அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜாரீப் ஆகியோர் 2016ஆம் ஆண்டு அமைதிக்கான நோபால் பரிசு வழங்க பரிந்துரைக்கிறோம்.
இவ்வாறு சுவீடன் அமைப்பு தெரிவித்துள்ளது.