மும்பை 26/11 தீவிரவாத தாக்குதல் முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் கைது
இஸ்லாமாபாத்: மும்பையில் 2008ம் ஆண்டு நடைபெற்ற தொடர் தீவிரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2008ம் ஆண்டு மும்பையின் தாஜ் ஹோட்டல் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 160 பேர் கொல்லப்பட்டனர், 308 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்புள்ளதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தபடி இருந்தது.
இந்நிலையில், மும்பை தாக்குதல், முக்கிய குற்றவாளி சுஃபியான் ஜபார் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு முக்கிய குற்றவாளி ஹமத் அமின் சாதிக் என்பவருக்கு நிதி உதவி செய்ததாக சுஃபியான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் தீவிரவாத வழக்கு சிறப்பு நீதிமன்றம், சுஃபியானுக்கு 8 நாட்கள் ரிமாண்ட் காவல் விதித்துள்ளது.