அடப்பாவிகளா.. வழுக்கை தலையில் தங்கமா..? மொசாம்பிக்கில் தொடரும் கொலைகள்.. போலீஸ் எச்சரிக்கை!
மொசாம்பிக் நாட்டில் வழுக்கை தலையில் தங்கம் இருக்கும் என பரவிய வதந்தியால் வழுக்கை தலை ஆண்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிலாங்கே: மொசாம்பிக் நாட்டில் வழுக்கை தலையில் தங்கம் இருக்கும் என பரவிய வதந்தியால் வழுக்கை தலை ஆண்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வழுக்கை தலை உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொசாம்பிக்கில் மூட நம்பிக்கைகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. கல்வி, பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் மிகவும் பின்தங்கியுள்ள அம்மக்கள் எப்படியாவது பணக்காரர்களாகி விட வேண்டும் என்பதில் மட்டும் குறியாக உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு மர்மமான முறையில் கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழுக்கைத் தலையில் தங்கம்
அதாவது சூனியக்காரர்கள் சிலர், பளபளக்கும் வழுக்கைத் தலையுடையவர்களிடம் நிறைய தங்கம் உள்ளிட்ட செல்வங்கள் இருக்கும் வதந்தி பரப்பி உள்ளனர். மூட நம்பிக்கையிலேயே மூழ்கிய அப்பகுதி மக்கள் வழுக்கைத் தலை உள்ளவர்களை குறி வைத்து கொலை செய்யத் தொடங்கியுள்ளனர்.
ஒரு வாரத்தில் 3 பேர்
கடந்த ஒருவாரத்தில் மட்டும் சம்பேஜியா மாகாணத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சூனியக்காரர்களின் சதி
தலைநகர் மப்பூட்டோவில் செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், மந்திர தந்திர காரியங்களுக்காக சூனியக்காரர்கள் வழுக்கை தலைகளையும் சில உறுப்புகளையும் கேட்பதாக கூறியுள்ளனர். இதற்காக சூனியக்காரர்களின் கையாட்கள் வழுக்கை தலையுடைய அப்பாவி ஆண்களை குறி வைத்து கொல்வதாக தெரிவித்துள்ளனர்.
வழுக்கைத் தலை ஆண்கள்
இதுவரை 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறிய போலீசார், வழுக்கை தலையுடைய ஆண்கள் செல்வந்தர்களாக இருப்பார்கள் என உள்ளூர் மக்களும் நம்புவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 2 இளைஞர்களும 20 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் அவர் கூறினார்.
உறுப்புகளும் திருட்டு
கொல்லப்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் உடலில் உள்ள சில உறுப்புகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பணக்காரர்களாக உடல் உறுப்புகளை வைத்து பூஜை செய்யும் பழக்கம் டான்சானியா, மலாவி உள்ளிட்ட பகுதி மக்களிடையே உள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளார்.
வழுக்கை தலையர்களுக்கு எச்சரிக்கை
கடந்த சில ஆண்டுகளாக சூனியக்காரர்களால் மூட நம்பிக்கைக்காக கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இருப்பினும் வழுக்கைத் தலை உடையவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.