புதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன்!
பியாங்ஜியாங்: புதிய அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக முடித்த கையோடு அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை வெறுப்பேற்றியுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
அமெரிக்காவும், தென் கொரியாவும் ராணுவ கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதை வடகொரியா கொஞ்சமும் விரும்பவில்லை. இருநாடுகளும் ஒத்திகை நடத்துவது தங்களின் மீது போர் தொடுக்கவே என்று கருதி வரும் வடகொரியா, அமெரிக்கா- தென்கொரியா இடையிலான கூட்டு பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆனால் வடகொரியாவின் எதிர்ப்புக்கு செவி சாய்க்காத அமெரிக்காவும் தென் கொரியாவும் தொடர்ந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கோபமடைந்த வடகொரியா 5 முறை ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி அச்சுறுத்தியது.
புதிய சோதனை வெற்றி
இந்நிலையில் நேற்று பெயரிடப்படாத புதிய வகை ஆயுதம் ஒன்றை வடகொரிய ராணுவம் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் முன்பு சோதனை செய்தது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக தெரிகிறது.
முழு திருப்தி
இந்நிலையில் பியாங்ஜியாங்கின் கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி இன்று வெளியிட்டுள்ள தகவலில், தங்கள் நாட்டின் ராணுவத்தில் தந்திரமான மற்றும் ஆச்சரியமளிக்கும் வெற்றி விகிதங்கள், அண்மைக்காலமாக நடக்கும் சோதனைகள் ஆகியவை முழு திருப்தியளிப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக கூறியுள்ளது.
யாராலும் வெல்ல முடியாது
மேலும் யாராலும் வெல்ல முடியாத ராணுவ திறன்களை தமது ராணுவம் பெற்றிருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறியதாகவும் தெரிவித்துள்ள கேசிஎன்ஏ, அமெரிக்கா அல்லது தென் கொரியா குறித்து அவர் எந்தவொரு குறிப்பிட்ட கருத்தையும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
என்ன ஆயுதம்?
நேற்று நடத்தப்பட்ட சோதனை ஜூலை மாதத்தில் இருந்து வடகொரியா நடத்தும் ஆறாவது சோதனையாகும். இதனிடையே கேசிஎன்ஏ, வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஆயுத சோதனை என்ன என்றும் அது எவ்வாறு செயல்பட்டது என்றும் விளக்கவில்லை. ஆனால் நேற்று நடைபெற்ற சோதனைகள் வெற்றிகரமாக இருந்தன என்றும் இராணுவத்தின் நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் அது தெரிவித்துள்ளது.
போட்டோ வெளியீடு
பியாங்ஜியாங்கின் அதிகாரப்பூர்வ ரோடோங் சின்முன் செய்தித்தாள் ஒரு வாகனத்தில் நிறுவப்பட்ட ஒரு லாஞ்சரில் இருந்து ஏவுகணை பாய்ந்து கடலோர பகுதியில் வைக்கப்பட்ட இலக்கை தாக்குவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டது. மேலும் ராணுவ அதிகாரிகளுடன் இந்த வெற்றியை அதிபர் கிம் ஜாங் உன் கைகளை உயர்த்தி கொண்டாடும் போட்டோவையும் அந்த செய்தித்தாள் வெளியிட்டிருந்தது.