20 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020!
பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்ததால் அவருக்கு கோமா என்றும் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் திடீரென ஒரு நிகழ்ச்சியில் அவர் தோன்றி பழைய பன்னீர்செல்வமாக வந்ததை யாரேனும் மறக்க முடியுமா?
வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன், கிட்டதட்ட சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். உலக நாடுகளே எதிர்த்தாலும் அணு ஆயுத சோதனையை இவர் கைவிடவில்லை. 36 வயதாக இருந்தாலும் இவரை சுற்றி சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. இவருக்கும் அதிபர் டிரம்பிற்கும் இடையிலான வார்த்தை போர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
வதந்திகள்
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் இவர் பொதுவெளியில் காணவில்லை. இவரது உடல் பருமனால் இவர் மோசமடைந்து அவர் இறந்துவிட்டார் என ஒரு சாராரும், இவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் என மறு சாராரும், கூற வதந்திகள் ரெக்கை கட்டிப் பறந்தன. கிம்மின் அப்பா இறந்து 51 நேரம் கழித்து அறிவித்ததை போல கிம்மிற்கும் அறிவிப்பார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
கிம்மின் அப்பா
இன்னும் சிலர் கிம்மின் தாத்தா, அப்பா மறைவான செய்தியை கூறிய செய்தியாளர் டிவியில் தோன்றும் போதெல்லாம் கிம் குறித்த மரண செய்தியை அவர் வாசிப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. இவர் இதே போல் கடந்த 2014ஆம் ஆண்டும் ஒரு மாதத்திற்கு மேல் காணாமல் போனார். பின்னர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் தோன்றினார்.
கொரோனா
எபோலா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பவே அவர் ஒரு மாதம் வெளியுலகிற்கு வரவில்லை. அது போல் கொரோனா தீவிரமடைந்த நிலையில் தனக்கு பரவி விடுமோ என்ற அச்சத்தால் கிம் தலைமறைவாக இருந்திருக்கலாம் என தகவல் பரவியது. மேலும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை மறைந்திருந்தபடி கிம் வேவு பார்க்கவே இந்த திரைமறைவு நாடகம் எனவும் கூறப்பட்டது.
நல்ல உதாரணம்
இந்த நிலையில்தான் பழைய பன்னீர் செல்வமாக கடந்த மே மாதம் 2-ஆம் தேதி கிம் உரத் தொழிற்சாலையின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அதற்கான புகைப்படத்தை வடகொரிய ஊடகம் வெளியிட்டது. வடகொரியாவில் கிம், ராணுவத்தை தாண்டி எந்த ஒரு விஷயமும் வெளியுலகிற்கு கசியவே கசியாது என்பதற்கு இதுதான் நல்ல உதாரணம். 2020-இல் கிம் காணாமல் போனதை யாராலும் மறக்கவே முடியாது.