தானே எடுத்துக் கொள்வதுதானே செல்ஃபி... ஏ புள்ள என்ன நீ இப்படி செய்ற!
வாஷிங்டன்: அமெரிக்காவின் டிவி தொகுப்பாளினியான கிம் கர்தாஷியனை செல்பி எடுக்கக் கூடாது என மருத்துவர்கள் கண்டிப்பாக கூறிவிட்டதால் செல்பி எடுக்க பெண் உதவியாளரை நியமனம் செய்தார்.
நவீன செல்போன்கள் வந்த நாள் முதல் போட்டோ எடுப்பது, பாட்டு கேட்பது, வீடியோ எடுப்பது என நீண்டு கொண்டே சென்றது. போன்களில் பிரென்ட் கேமரா வைத்தவுடன் செல்பி எடுக்கும் மோகம் அதிகரித்து வருகிறது.
எங்கு பார்த்தாலும் செல்பி எதை பார்த்தாலும் அதனுடன் செல்பி என்று போய் கொண்டிருக்கிறார்கள். சிறிதும் ஆபத்தையும் உணராமல் இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர்.
பட்டியல்
ஓடும் ரயில் முன், கொடிய விலங்கு முன், பாம்புடன் செல்பி, பாம்புக்கு முத்தம் கொடுப்பது போல் செல்பி, வெள்ளப் பெருக்கின் போது செல்பி, காடுகளில் வனவிலங்குகளுடன் செல்பி என இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.
தாக்கம்
இதில் பலர் தங்கள் உயிரை மாய்த்து கொண்டாலும் அதன் மூலம் பாடம் கற்பது என்பதே இல்லை. இது போல் செல்பி மோகம் ஒவ்வொருவரையும் பாடாய்படுத்தி வருகிறது. இவர்களை விடுங்க, குழந்தைகள் கூட அருமையாக செல்பி எடுக்கும் அளவுக்கு அதன் மீது தாக்கம் ஏற்பட்டுள்ளது.
விதவிதமாக அலங்காரம்
இதுபோல் அமெரிக்காவின் டிவி சேனலின் தொகுப்பாளினியும் தொழில் முனைவோருமான கிம் கர்தாஷியன். இவருக்கு செல்பி என்றால் மிகவும் இஷ்டம். தன்னை விதவிதமாக அலங்காரம் செய்து செல்பி எடுத்த வண்ணம் இருப்பார். எடுத்த படங்களை சமூகவலைதளங்களில் அனுப்பி வருவார்.
டாக்டர்கள் கறார்
கைகளுக்கும் போனுக்கும் ஓய்வே இல்லாமல் செல்பி எடுத்து வந்த இவருக்கு மணிக்கட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவரிடம் சென்ற போது கைகளுக்கு நிச்சயம் ஓய்வளிக்க வேண்டும் என்று கிம்மை "கட்டி போட்டு விட்டனர்".
நியமனம்
இதனால் செல்பி எடுப்பது எப்படி என யோசித்த கிம்முக்கு ஒரு ஐடியா தோன்றியது. அதாவது நாம் செல்பி எடுத்தால் தானே பிரச்சினை, இதற்காக ஒருவரை நியமனம் செய்து விட்டால்... அதன்படி செல்பி எடுப்பதற்காகவே ஒரு பெண்ணை சம்பளத்துக்கு நியமனம் செய்துள்ளார்.
இது எப்படி அதுவாகும்
தானே எடுத்தாதாம்மா அது செல்பி... அடுத்தவர் எடுத்தால் அது எப்படி செல்பியாகும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது சரி ஒரு விஷயத்தில் அடிக்ட் ஆகிவிட்டால் அதிலிருந்து மீளுவது கடினம்தான்.