குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்... குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
குவைத்: குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91.
வாழ்நாள் முழுவதும் அமைதியையும், சமாதானத்தையும் தனது கொள்கையாக கொண்டு இயங்கிய அவர் மீது அரபுலகின் அனைத்து மன்னர்களும் போற்றத்தக்க வகையில் மரியாதை கொண்டுள்ளனர்.
இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழர்கள் மற்றும் மலையாளிகள் குவைத்தில் அதிக வேலைவாய்ப்புகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி
நவீன சிற்பி
குவைத் மன்னராக கடந்த 2006-ம் ஆண்டு பொறுப்பேற்ற ஷேக் சபா அல் அஹ்மத் அந்நாட்டின் நவீன சிற்பி என்று அழைக்கப்படுகிறார். குவைத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பணிகளை முன்னெடுத்தவர் இவர், 1963 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில் சுமார் 40 ஆண்டுகாலம் குவைத் வெளியுறவுத்துறைத் துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.
3 நாள் துக்கம்
மிகச்சிறந்த ராஜ தந்திரியான இவர் உலக நாடுகளுடன் இணைந்து குவைத்தை வளர்த்தெடுத்தார். இந்நிலையில் ஷேக் சபா அல் அஹ்மத்தின் மரணத்தால் குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், அரசு சார்ந்த எந்த அலுவல்களும் அடுத்த 3 நாட்களுக்கு நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக்குறைவு
கடந்த 2002-ம் ஆண்டு குடல் இறக்க அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட இவருக்கு அடுத்த 2 ஆண்டுகளில் இதயப்பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டு அதன் இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். இதேபோல் 2007-ம் ஆண்டு சிறுநீரக பாதை அடைப்பு பிரச்சனை காரணமாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இதனிடையே 2019 ஆகஸ்ட் மாதம் முதலே ஷேக் சபா அல் அஹ்மத் உடல் நலிவுற்ற நிலையில் காணப்பட்டார்.
இடைக்கால மன்னர்
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அறுவைச் சிகிச்சை ஒன்றுக்காக அமெரிக்கா சென்ற அவர் மின்னிசோட்டா மாகாணத்தில் உள்ள ரோசஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குவைத் மன்னரை காப்பாற்ற அமெரிக்க மருத்துவர்கள் குழு எவ்வளவோ போராடியும் இயற்கையிடம் தோல்வியை தழுவியது. இதனிடையே குவைத் மன்னர் மறைவை அடுத்து அவரது தம்பியான 83 வயது நிரம்பிய ஷேக் நவாஃவ் அல் அஹமத் இடைக்கால மன்னராக பதவியேற்றுக்கொண்டார்.