உலக அமைதிக்கு ஓங்கி ஒலித்த கோஃபி அன்னான் குரல் நிரந்தரமாக அமைதியாகிறது!
-ராஜாளி
ஜெனீவா: ஆகஸ்ட் 18-ம் தேதி மறைந்த ஐக்கிய நாடுகள் சபையின் 7 வது செயலாளராக இருந்த கோஃபி அன்னான் உடல் இன்று கானா நாட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதி சடங்கிற்காக அவரது உடல் சொந்த நாடான கானா நாட்டிற்கு வந்து சேர்ந்தது. அவரது உடலை கானா நாட்டு அதிபர் நானா அகுபு அட்டோ முறைப்படி பெற்றுக்கொண்டார். பின்னர் அவரது உடல்மீது போர்த்தப்பட்டிருந்த ஐக்கிய நாடுகளின் கொடி அகற்றப்பட்டு கானா நாட்டு கொடி போர்த்தப்பட்டது. ராணுவ வீரர்கள் அவரது உடலை சுமந்து வந்தனர்
இன்று நடைபெறவுள்ள அவரது இறுதிச் சடங்கில் ஐக்கிய நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சொந்த நாட்டில் தொடர்ந்து 3 நாட்கள் இறுதி மரியாதை செலுத்தப்படவேண்டும் என்பதற்காக கடந்த திங்கள்கிழமை அவரது உடல் கானா நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நாளை காலை முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
1938 ம் ஆண்டு ஏப்ரல் 8- ம் நாள் கானா நாட்டில் உள்ள குமசியின் கோபேன்ட்ரோஸ் பகுதியில் பிறந்த இவரும் இவரது சகோதரியும் இரட்டையர்கள். கானா நாட்டில் வித்தியாசமான ஒரு வழக்கம் இருந்தது. குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த கிழமையையே அவர்களுக்கு பெயர்களாக வைப்பது வழக்கம். அப்படி இவருக்கு வைக்கப்பட்ட பெயர்தான் கோஃபி அன்னான். கானா மொழியில் கோஃபி என்றால் வெள்ளிக்கிழமை என்று அர்த்தம். 1974 முதல் 1976 வரை, அவர் கானா சுற்றுலாத்துறை இயக்குநர் பணியாற்றிய அன்னான் அதற்கு முன்னரே WHO என்றழைக்கப்படும் உலக சுகாதார அமைப்பில் பட்ஜெட் அதிகாரியாக பணியாற்றி இருந்தார். பின்னர் மீண்டும் 1980 ம் ஆண்டு ஐ நா பணிக்கு திரும்புகிறார். ஐ நா மன்றத்தில் வெவ்வேறு பணிகளில் திறம்பட பணியாற்றிய இவர் 1994-ம் ஆண்டு நடைபெற்ற ருவாண்டா படுகொலையின்போது ஐ நா வின் அமைதிப்படையை இயக்கும் பொறுப்பிற்கு வந்தார்.
1997-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஐ நா சபையின் 7 வது செயலாளராக பணியேற்ற கோஃபி 1998 ம் ஆண்டு பாலின சமத்துவத்தை ஐ நா வில் கொண்டு வரும் நோக்கில் கனடாவை சேர்ந்த லூயிஸ் பிரெச்சடோ என்ற பெண்ணை ஐ நா வின் முதல் துணை தலைமை செயலாளாராக பணியில் அமர்த்தினார். 1999- ம் ஆண்டு கார்ப்பரேட்டுகளின் சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் குளோபல் காம்பக்ட் என்ற பிரச்சாரத்தை சிறப்பாக செயல்படுத்தினார். எச் ஐ வி நோயை குணப்படுத்தவும் தடுக்கவும் பெரும் முயற்சி மேற்கொண்ட அன்னான் வளரும் நாடுகளில் இந்நோயின் பாதிப்பை குறைக்க உலகளாவிய எயிட்ஸ் மற்றும் சுகாதார நிதியம் ஒன்றை உருவாக்க பெரும் முயற்சி மேற்கொண்டார். 2001 ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு ஐ நா மன்றத்திலும் பாதுகாப்பு சபையிலும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இப்படியாக இவரது ஐ நா பொது செயலாளராக இவரது பதவிக் காலம் 2001 –ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைகிறது.
பொதுச் செயலாளராக சிறப்பாக பணியாற்றியதன் காரணமாக மீண்டும் இவருக்கே ஐ நா பொதுச் செயலாளராக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது அவரது திறமைக்கும், புகழுக்கும் கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்பட்டது. 2005 ம் ஆண்டு ஐ.நா. அமைப்பை புதுப்பித்து, பலப்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை பரிந்துரைத்தஅவர் ஐ.நா. பொதுச்சபையில் லார்ஜர் பரீடம் என்ற அறிக்கையை தாக்கல் செய்தார். இவரது பரந்த அளவிலான ராஜதந்திர முயற்சிகளால் நைஜீரியாவில் மக்களாட்சி 1998-ம் ஆண்டு மலர்ந்தது. அதே ஆண்டு இவர் ஈராக்கிற்கு மேற்கொண்ட பயணத்தினால் ஐ நா பாதுகாப்பு கவுன்சிலுக்கும் ஈராக்கிற்கும் இடையிலான முரண்பாடு களையப்பட்டதோடு அப்போது ஏற்படவிருந்த போரும் தவிர்க்கப்பட்டது 1999-ம் ஆண்டு திமூர் சுதந்திரத்திற்கு பெரிதும் காரணமாக இவரது செயல்பாடுகள் அமைந்தது. 2006-ம் ஆண்டு இவரது தலையீட்டால் கமரூன் மற்றும் நைஜீரியா இடையிலான பிரச்சனை முடிவுக்கு வந்தது
2012ம் ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு கலவரங்களை முடிவுக்கு கொண்டு வரும்பொருட்டு U.N அராப் லீக் –ன் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்டார் ஆனால் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டார். சிரியாவில் உள்ள இனக்குழுக்களிடையே அமைதியை ஏற்படுத்த முடியவில்லை அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை என்ற காரணத்தினால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விடுகிறார்ஐ நா பொதுசெயலாளர் பணிக்குப் பின்னர் கானா திரும்பிய அன்னான் தி குளோபல் ஹியுமானிடரியன் அமைப்பு, தி எல்டர்ஸ், யுனைட்டட் நேஷன்ஸ் பவுண்டேசன் போன்ற பல்வேறு அமைப்புகளில் தீவிரமாக பணியாற்றினார்.
ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகை கட்டமைப்பதற்காக பாடுபட்டதற்காக அன்னான் மற்றும் ஐ நா சபைக்கு 2001 ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது ஆங்கிலம், பிரஞ்சு, ஆகான் மற்றும் பிற ஆப்ரிக்க மொழிகளில் புலமை பெற்ற இவர் 1965 –ம் ஆண்டு அலாகிஜா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு அமா என்ற மகளும் கோஜா என்ற மகனும் உண்டு. பின்னர் 1970 ம் ஆண்டு இவர் தனது மனைவி அலாகிஜாவை விவாகரத்து செய்து விட்டு 1984ம் ஆண்டு ஐ நா வழக்கறிஞரான லாகர்க்ரேன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். நாடெர் மவுசாவிஸடே என்பவருடன் இணைந்து எழுதிய “எ லைப் இன் வார் அண்ட் பீஸ்” என்ற புத்தகம் 2012 ம் ஆண்டு வெளியிடப்பட்டது
உலகளவில் பல்வேறு சிக்கலான பிரச்சனைகளை தீர்க்க உதவி உலக அமைதிக்கு ஓங்கி ஒலித்த அந்தக் கருபினக் குரல் நிரந்தர அமைதியை தேடி செல்கிறது.