நேபாள புதிய பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒளி- இந்திய வம்சாளி தலைவருக்கு துணை பிரதமர் பதவி!!
காத்மாண்டு: நேபாள நாட்டின் புதிய பிரதமராக மூத்த இடதுசாரி தலைவர் கே.பி. சர்மா ஒளி இன்று பதவியேற்றார். இந்திய வம்சாவளியினராகிய மாதேஸி இனத்தைச் சேர்ந்த பிஜயா குமார் கச்சதாருக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
உலகின் ஒரே இந்துநாடு என்ற பெருமை கொண்டிருந்தது நேபாளம். இந்நாட்டில் மன்னராட்சி முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்களாட்சி மலர்ந்தது.
இதனைத் தொடர்ந்து புதிய அரசியல் சாசனம் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்துநாடாக இருந்த போதும் 'மதச்சார்பற்ற' அரசியல் சாசனத்தை பின்பற்றுவோம் எனவும் நேபாளம் பிரகடனம் செய்தது.
இதனால் பிரதமர் கொய்ராலா ராஜினாமா செய்தார். மேலும் பீகாரை பூர்வீகமாக கொண்ட தெற்கு நேபாளத்தில் வாழும் மாதேஸிகள் தாங்கள் புதிய அரசியல் சாசனப்படி இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதாக கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் நேபாள அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர இந்தியா சில பரிந்துரைகளை முன்வைத்தது.
ஆனால் நேபாளம் திட்டவட்டமாக இதை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து நேபாளத்துக்கு இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் டிரக்குகள் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனால் நேபாளத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
அத்துடன் இந்தியா மறைமுக பொருளாதாரத் தடை விதிப்பதாக கூறி நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதனால் நிலைமையை சமாளிக்க சீனாவிடம் நேபாளம் உதவி கோர முடிவு செய்தது. இந்நிலையில் நேபாளத்தின் புதிய பிரதமராக மூத்த இடதுசாரித் தலைவர் கே.பி. சர்மா ஒளி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேபாளத்தின் 2வது பெரிய கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர் ஒளி. பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒளி, முதல் கட்டமாக நாட்டில் நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுவோம் என்றார்.
இந்நிலையில் இன்று நேபாளத்தின் 38வது பிரதமராக கே.பி.சர்மா ஒளி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் ராம்பரண் யாதவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அவருடன் மாதேஸி மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் பிஜயாகுமார் கச்சாதார் மற்றும் ராஷ்டிரிய பிரஜந்தந்திரா கட்சியின் தலைவர் கமால் தாபா ஆகியோர் துணை பிரதமர்களாக பதவியேற்றனர்.
மாதேஸி இன மக்கள்தான் தங்களுக்கு அரசியல் சாசனத்தில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை பிஜயாகுமார் தலைமையிலான பிரிவு ஆதரிக்கவில்லை.
அதேபோல் கமால் தாபாவின் ராஷ்டிரிய பிரஜந்தந்திரா கட்சி, நேபாளம் மதச்சார்பற்ற நாடு என்பதை ஏற்கநாடு... மீண்டும் இந்துநாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வருகிறது.
இந்த இரு தரப்பையும் சமாளிக்கும் வகையில் இந்த துணை பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹரிபோல் கஜுரேல், ராம்குமார் சுப்பா, சோம் பிரசாத் பாண்டே, அக்னிகரேல், சத்யா நாராயண் மண்டல் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணை அதிபர் பிரமானந்த ஜா, பதவி விலகிய முன்னாள் பிரதமர் கொய்ராலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.