சர்வதேச விதிகளை பாக். மீறி உள்ளது.. குல்பூஷன் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய பரபர வாதம்!
சர்வதேச சட்ட விதிகளை குல்பூஷன் யாதவ் வழக்கில் பாகிஸ்தான் மீறி இருப்பதாக இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டி இருக்கிறது.
இஸ்லாமாபாத்: சர்வதேச சட்ட விதிகளை குல்பூஷன் யாதவ் வழக்கில் பாகிஸ்தான் மீறி இருப்பதாக இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டி இருக்கிறது.
பாகிஸ்தானில் மரண தண்டனை கைதியாக இருக்கும் குல்பூஷன் யாதவ் எப்போது இந்தியா கொண்டு வரப்படுவார், இவர் மீதான தண்டனை எப்போது ரத்து செய்யப்படும் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இவர் மீதான தூக்கு தண்டனை தற்போது சர்வதேச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் நடந்துள்ள நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்றுதான் சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா குறிப்பிடத்தகுந்த சில முக்கிய வாதங்களை வைத்தது.
யார் இவர்
இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்து பின் பணி ஓய்வு பெற்றவர் குல்பூஷன் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் சுற்றுலா சென்று அங்கு இருந்த போது உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். பல நாட்கள் விசாரிக்கப்பட்ட இவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2018 ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது.
பெரும் பரபரப்பு
இது இந்தியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை விடுதலை செய்யும்படி கடந்த பல மாதங்களாக இந்தியா கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவின் எந்த கோரிக்கைக்கும் பதில் அளிக்கவில்லை. இது இரண்டு நாட்டு உறவில் பெரிய சிக்கலை உண்டாக்கியது.
நீதிமன்றம்
இதையடுத்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடுத்தது. இதையடுத்து தீர்ப்பு வரும்வரை குல்புஷனை தூக்கிலிட கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தற்போது இதன் மீதான வழக்கு விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இதன் மீதான விசாரணை நடைபெற்றது.
ஆஜர் படுத்தப்பட்டார்
இன்று நடந்த விசாரணையில் இந்தியா தரப்பில் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே நெதர்லாந்தின் தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் செய்தார். பாகிஸ்தான் சர்வதேச விதிகளை இந்த வழக்கில் மீறி இருக்கிறது. குற்றவாளி எப்படி நடத்த வேண்டும் என்ற அடிப்படை விதிகளை கூட பாகிஸ்தான் இந்த வழக்கில் பின்பற்றவில்லை.
என்ன வாதம்
பாகிஸ்தான் வேண்டும் என்றே இந்தியாவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று இப்படி செய்துள்ளது. பாகிஸ்தான் இதில் பல விதமான உண்மைகளை மறைத்து உள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி அவர்களின் ராணுவ நீதிமன்றம் குல்புஷனுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
தவறு
முக்கியமான சட்ட நிபந்தனைகளை பாகிஸ்தான் இந்த விசாரணையில் பூர்த்தி செய்யவில்லை. எந்த அனுமதியும் இன்று ஜாதவை பல நாட்கள் கஸ்டடியில் வைத்து விசாரித்து இருக்கிறார்கள். இந்த விசாரணையில் பாகிஸ்தான் சர்வதேச விதிகளை மட்டுமின்றி பாகிஸ்தானின் சொந்த விதிகளை கூட மீறி விசாரணை நடத்தி உள்ளது.
இல்லை
ஜாதவை முறையின்றி கைது செய்து, மோசமாக விசாரணை செய்து, கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கி பின் வேகவேகமாக தண்டனை வழங்கி இருக்கிறார்கள். இதில் ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய அடிப்படை உரிமைகள், வசதிகள், வாய்ப்புகள் என்று அனைத்தையும் பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதை சர்வதேச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தூதரகம் உரிமை
முக்கியமாக வியட்நாம் சர்வதேச சட்டவிதிகளில் ஒன்றான தூதரக சந்திப்பு அனுமதியை கூட பாகிஸ்தான் இதில் மறுத்து இருக்கிறது. தூதரக அதிகாரிகளை, ஜாதவ் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று இந்தியா தரப்பு இதில் வாதம் செய்துள்ளது. இந்தியா சுமார் 3 மணி நேரம் இதில் வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.