போதைப் பொருளுக்கு எதிரான தூதர் பதவியில் இருந்து குமார் சங்கக்கார பதவி விலகக் கோரி போர்க்கொடி
கொழும்பு: போதைப் பொருளுக்கு எதிரான தூதர் பதவியில் இருந்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார பதவி விலக வேண்டும் என்று போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு இலங்கை அரசு சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான தூதர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கொழும்புவில் கடந்த வாரம் பாடகர் என்றிக்கின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இலங்கையின் ‘Live Events' என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் பியர் மற்றும் சாராயம் போன்ற மதுபானங்கள் பரிமாறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் டிக்கெட் கட்டணம் ரூ.5000 முதல் ரூ.50000 வரை வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரும் போதைப் பொருளுக்கு எதிரான தூதர் பதவி வகித்துவருபவருமான குமார் சங்கக்கார கலந்து கொண்டுள்ளார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.
இதனிடையே நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் போதைப் பொருளுக்கு எதிரான தூதர் பதவியில் இருந்த குமார் சங்கக்கார பதவி விலக வேண்டும் என்று போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.