ஈராக்கில் கொழிக்கும் “ஏ.கே-47” துப்பாக்கி சந்தை– 700 டாலர்களுக்கே கிடைக்கும் அபாயம்!
பாக்தாத்: ஈராக்கில் மூலைக்கு மூலை வெறும் 700 டாலர்களுக்கு எல்லாம் ஏ.கே.47 துப்பாக்கிகள் விற்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் படைகள் மற்றும் அரசுக்கு ஆதரவான குர்திஷ் படைகளுக்கு இடையில் உச்சகட்ட போர் நடைபெற்று வருவதால் அந்நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயுதச் சந்தை வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இங்குள்ள தெருவோரக் கடைகளில் 700 டாலர்களுக்கு ஒரு ஏ.கே 47 ரக துப்பாக்கியை வாங்கி விட முடியும். 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவற்றை வெறும் 300 டாலர்களுக்கே விற்று வந்துள்ளனர்.
சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் ஒரு துப்பாக்கி 1500 டாலர் வரை விலை போனதாக கூறும் சில வியாபாரிகள் தற்போது விலை சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து 700 டாலர்களுக்கு விற்கப்படுவதாக கூறுகின்றனர்.
துப்பாக்கிகள் மட்டும் இன்றி எம் - 16 ரக ராக்கெட்டுகள் 3 ஆயிரம் டாலர் விலையில் கிடைக்கின்றன. அவற்றை ஏவும் பொறி உள்ளிட்ட அனைத்து வகை ஆயுதங்களும் இந்த திறந்தவெளி சந்தைகளில் கிடைக்கின்றன.
ஐ.எஸ்.ஐ.எஸ் படையினருடன் ராணுவம் மோதும் இடங்களில் இறந்து கிடப்பவர்களின் கையில் இருக்கும் ஆயுதங்களை கைப்பற்றி வரும் சிலர், அவற்றை இந்த மலிவுவிலை சந்தையில் குறைந்த விலைக்கு விற்றுவிடுகின்றனர்.