'பின்லேடன்' கம்ப்யூட்டரில் குவிந்து கிடந்த "ஏ" படங்கள்.. பகிரங்கப்படுத்த ரொம்பவே யோசிக்கும் சி.ஐ.ஏ.!
வாஷிங்டன்: பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் கொய்தா இயக்கத் தலைவர் பின்லேடனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆவணங்களை பகிரங்கப்படுத்தியுள்ளது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. அதே நேரத்தில் பின்லேடன் மாளிகையில் இருந்த கணிணியில் குவிந்துகிடந்த ஆபாச படங்களை அம்பலப்படுத்துவதற்கு சி.ஐ.ஏ. தயங்கி வருகிறது.
உலகை அச்சுறுத்திய அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாப் என்ற இடத்தில் கோட்டை போன்ற வீட்டில் பதுங்கியிருந்தார். அவருடன் 3 மனைவிகளும் பல அல்கொய்தா தீவிரவாதிகளும் அந்த வீட்டில் வசித்து வந்தனர்.
அபோதாப் மாளிகையில் ஒசாமா பதுங்கியிருப்பதை உறுதி செய்த அமெரிக்கா சிறப்பு கமாண்டோ படை மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவிகள் மற்றும் சில தீவிரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டனர். அந்த மாளிகையில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்காவின் தாக்குதல் படையான கடற்படையின் ';சீல்' கைப்பற்றியது.
இந்த ஆவணங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவின் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் நாசமாக்குவது என்பது குறித்த சதித்திட்டங்களே அதிகமாம்.. இது தொடர்பான ஏராளமான ஆங்கில புத்தகங்களையும் ஒசாமா வாங்கிக் குவித்து வைத்திருந்திருக்கிறார்.
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்ஸுக்கு பின்லேடன் இலக்கு வைத்திருந்ததும் இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமானது.. பிரான்ஸ் நாடு குறித்த 19 ஆங்கில புத்தகங்களும் ஒசாமாவின் அலமாரியில் இருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இவைகளுக்கு அப்பால் பின்லேடன் வீட்டு கணிணியில் நூற்றுக்கணக்கான ஆபாச படங்களும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த ஆபாச படங்களை பின்லேடன்தான் பார்த்தாரா என்பதை சி.ஐ.ஏ. உறுதி செய்யவில்லை. இந்த ஆபாசப் படங்களை பின்லேடனின் மூன்று மனைவிகளோ அல்லது உதவியாளர்களோ பார்த்திருக்கவும் வாய்ப்பிருக்கலாம் எனவும் சி.ஐ.ஏ. கருதுகிறது.
தற்போது பின்லேடன் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை மட்டும் பகிரங்கப்படுத்தியிருக்கிறது சி.ஐ.ஏ. அதே நேரத்தில் இந்த ஆபாசப் படங்களை பகிரங்கப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறதாம் சி.ஐ.ஏ.