"லக்வி" .. 'தவமாய்' காத்திருக்கும் லஷ்கர் தீவிரவாதிகளும் கண்ணாமூச்சி காட்டும் பாகிஸ்தானும்!!
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷகி உர் ரஹ்மான் லக்வி விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து குழப்பமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறது.
லக்வி.. இந்தியாவுக்கு எதிரான ஜிஹாத் என்ற புனிதப் போரில் பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமான நபர்.. மும்பையில் 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி..
இந்த லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது ஆனால் பாகிஸ்தான் அரசு தடுத்து வைக்கிறது... மீண்டும் பாகிஸ்தான் நீதிமன்றம் தடை விதிக்கிறது.. மீண்டும் பாகிஸ்தான் அரசு கைது செய்கிறது என்ற கண்ணாமூச்சி தொடருகிறது..
லக்வி விவகாரத்தை விளையாட்டுத்தனமாகத்தான் பாகிஸ்தான் கையாள்கிறது என்பதைத்தான் இவை வெளிப்படுத்துகின்றன..
பாகிஸ்தானைப் பொறுத்தவரை மிகவும் உணர்ச்சிப்பூர்வமான முக்கியமான ஜிஹாதிதான் லக்வி. ஹபீஸ் சயீத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு எதிரான நல்ல பிரசாகர்.. அவ்வளவே. ஆனால் களத்தில் நிற்பது லக்விதான்..
லஷ்கர் இ தொய்பா இயக்கத் தீவிரவாதிகள், லக்வி மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளனர். இந்தியாவுக்கு எதிரான லஷ்கரின் யுத்தத்தில் கட்டளைத் தளபதியாக செயல்படுகிறவன் லக்வி என்பதால் தீவிரவாதிகளுடன் மிகவும் நெருக்கம்...
பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு எதிரான ஜிஹாதிகளுக்கு லக்வி ஒரு இமாம் போலத்தான்... 1960ஆம் ஆண்டு பிறந்த லக்வியின் 2 மகன்களும் இந்திய ராணுவத்துக்கு எதிரான யுத்தத்தில் உயிரிழந்தவர்கள். அபு காசிம் மற்றும் அபு குதால் ஆகிய இரு மன்களை ஜிஹாதிகளாக்கிய போது தன் மனைவியிடன் மனதை தளர விடவேண்டாம் என்று சொன்னதும் லக்விதான்..
அத்துடன் காஷ்மீர் போரில் கணவரை இழந்த விதவைகளுக்கான முகாம்களை நடத்துமாறு மனைவிக்கு உத்தரவிட்டிருந்தான் லக்வி. இது போன்ற காரணங்களால் லக்வி மீது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு மிகுந்த மரியாதை.
லக்வியை தடுத்து சிறையில் வைக்க பாகிஸ்தான் விரும்புவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் நெருக்கடிக்காகத்தான் தடுத்து வைக்கிறோம் என்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது பாகிஸ்தான்..
லக்விக்கு எதிரான வழக்கை விசாரிக்க நீதிபதிகளே அச்சப்படும் வகையில் லக்வியின் செல்வாக்கு இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்வோம்..
லக்வி விவகாரத்தில் பாகிஸ்தான் மிகவும் 'தெளிவாக' குழப்பத்தை ஏற்படுத்துகிறது. லக்வி இல்லாமல் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தவிக்கின்றனர்.. இருப்பினும் ஐ.எஸ்.ஐ. மற்றும் பாகிஸ்தான் ராணுவக்கு மிக விசுவாசமானவர்கள் என்பதாலேயே இன்னமும் லக்விக்காக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர்.. பாகிஸ்தான் அரசும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது!