2,850 அடி மலையை விலைபேசிய லட்சுமி மிட்டல்.... இங்கிலாந்தில் எதிர்ப்பு வலுக்கிறது
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள 2,850 அடி உயர பிலென்கத்ரா மலையை தனியாருக்கு விற்க அந்நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தின் இயற்கை எழில் சூழ்ந்த மாகாணங்களுள் ஒன்றான கும்பிரியாவின் லேக் மாவட்டத்தில் காணப்படுகிறது 2,850 அடி உயர பிலென்கத்ரா மலை. இது அரசகுடும்பத்தின் லோன்ச்டலே பிரபுவுக்கு சொந்தமானது.
கடந்த 2006ஆம் ஆண்டு லோன்ச்டலே இறந்த பிறகு, அவரது சொத்துக்களுக்கு வாரிசு அரசுக்கு தான் செலுத்த வேண்டிய 9 மில்லியன் பவுண்டு வரி பாக்கிக்காக இம்மலையை விற்க முடிவெடுத்தார்.
மலை விற்பனைக்கு...
2,676 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைக்கான விற்பனை விலையாக 1.75 மில்லியன் பவுண்டு நிர்ணயிக்கப்பட்டது. மலையை விற்பனை குறித்த அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது.
தனியார் வசம் செல்லக்கூடாது...
பல எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் ஊக்குவிப்பு சக்தியாக இருந்துள்ள இந்த மலைப்பகுதி தனியார்வசம் சென்றால் உயரடுக்கு செல்வந்தர்களின் விளையாட்டு மைதானமாக மாறிவிடக்கூடும் என்ற அச்சம் விளம்பரத்தைக் கண்ட உள்ளூர் மக்களுக்கு உண்டானது.
சமூகச் சொத்தாக வேண்டும்...
மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது 'பிலென்கதரா நண்பர்கள் அமைப்பு'. இம்மலை தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட்டு சமூக சொத்தாக மாற்றப்படவேண்டும் என இந்த இயக்கம் வலியுறுத்தியது.
கோரிக்கை நிராகரிப்பு...
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எச்-எச் சொத்து விற்பனை நிறுவனரான ஜான் ராப்சன் இதற்கான ஒரு விற்பனை வாய்ப்பும் வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
கூடுதல் தொகை...
பின்னர், இந்த மலையை வாங்குவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தவர் இந்தியத் தொழிலதிபர் லட்சுமி மிட்டல் என்பதுவும், நிர்ணயிக்கப்பட்டுள்ள விற்பனைத் தொகையைவிடக் கூடுதலாக அவர் கேட்டிருப்பதுவும் வெளிச்சத்திற்கு வந்தது.
நியாயமான முடிவு...
இதனைத் தொடர்ந்து இந்த நண்பர்கள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், சொத்து வரி பாக்கிக்காக விற்பனை நடைபெற இருப்பதால் விரைவில் நியாயமான முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் எச்-எச் சொத்து விற்பனை நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.