எத்தியோப்பியாவில் குப்பைமேடு சரிந்து விழுந்ததில் 46 பேர் பரிதாப மரணம்
உலகின் வறுமையான நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் மிகப் பெரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 46 பேர் இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
அடிஸ் அபாபா: எத்தியோப்பியா, தலைநகர் அடீஸ் அபாபாவில் ஏற்பட்ட மிகப்பெரிய குப்பை மேடு சரிவில் 46க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
அடீஸ் அபாபாவில் மிகப் பெரிய குப்பைக் கிடங்கு இருந்தது. அங்கு பயோ கேஸ் கட்டுமானத்திற்காக பல ஆயிரம் டன் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தது.
கோஷே என்ற இடத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் சரிந்து விழுந்ததில், அதனருகே வசித்த 46 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 32 பேர் பெண்கள், 14 பேர் ஆண்கள் மற்றும் குழந்தைகள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குப்பை பொறுக்குபவர்கள்.
முசா சுலைமான், என்பவர் கூறுகையில், இந்த சரிவு ஏற்படும் போது மிகப் பெரிய சத்தம் ஏற்பட்டது. எனது வீடு வெறும் குச்சிகளாலும் பிளாஸ்டிக் சீட்டுகளாலும் ஆனது. இந்த சத்தம் கேட்டவுடன் நான் என் குடும்பத்தாரை இழுத்துக்கொண்டு வெளியே ஓடிவந்துவிட்டதால், தப்பித்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தெருக்களில் அமர்ந்து கண்ணீர்விட்டு அழுதனர். குப்பை சரிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையில் பல பேர் சிக்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் காவல்துறை, உள்ளூரைச் சேர்ந்தவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இந்த குப்பைச் சரிவை நேரில் பார்த்த இப்ராஹிம் முகமது கூறும்போது, வெறும் மூன்று நிமிடங்களில் அந்த குப்பை சரிவு நடந்து முடிந்துவிட்டது எனக் கூறினார். அந்தக் குப்பைமேட்டை சுற்றி 300க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனராம்.