கராச்சியில் நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி
கராச்சி:பாகிஸ்தானின் கராச்சி நகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் இருக்கும் குலிஸ்தான் இ ஜவ்ஹார் பகுதியில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் வசித்து வந்த 3 மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரும், மீட்புக் குழுவினரும் சுமார் 5 மணிநேரம் போராடி 13 உடல்களை மீட்டுள்ளனர். அதில் 7 உடல்கள் குழந்தைகளுடையது. இந்த விபத்தில் பலியான 7 குழந்தைகளில் ஒன்று 6 மாத பெண் குழந்தை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஜாவித் ஜஸ்கானி தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவால் 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பலியாகியுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் கவலை தெரிவித்துள்ளதுடன் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.