ஆப்கானிஸ்தானில் பயங்கரம்.. தங்கச்சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு.. மண்ணில் புதைந்து 30 பேர் பலி
காபூல்:ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தங்கச்சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 30 பேர் மண்ணில் புதைந்து பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கோஹிஸ்தான் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த மாவட்டத்தில் வசித்து வரும் மக்கள் ஆண்டாண்டு காலமாக தங்கசுரங்கத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இதுபோன்ற தருணங்களில் அவ்வப்பொழுது விபத்துகள் ஏற்படுவதும், உயிர்பலிகள் நிகழ்வதும் வாடிக்கையான ஒன்றாகும். இந் நிலையில் மீண்டும் ஒரு விபத்து கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏற்பட்டுள்ளது.
200 அடிஆழம் கொண்ட அந்த சுரங்கத்தில் உள்ளே ஆற்று படுகையில் அவர்கள் தங்கம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏராளமான தொழிலாளர்கள் அந்த பணியில் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
விபத்தில் உள்ளே சுரங்கம் தோண்டும் பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மண் சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
மற்றவர்களின் நிலைமை என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை. விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மருத்துவ உதவிக்குழுவும் விரைவாக அங்கு அனுப்பப்பட்டுள்ளது.