வங்க தேசத்தில் கனமழை... வெள்ளம்.. நிலச்சரிவில் சிக்கி 53 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கலாம் என பீதி
வங்காள தேசத்தில் கனமழை கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதோடு நிலச்சரிவும் ஏற்பட்டு 53 பேர் பலியாகியுள்ளனர்.
டாக்கா: வங்க தேசத்தில் பெய்த கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரிடர் நிகழ்ந்துள்ளது.
இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி தற்போது வரை 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வங்கதேசத்தின் பல இடங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக டாக்கா மற்றும் சிட்டகாங் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல மணி நேரமாக விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் ரங்கமாதி, பந்தர்பான் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மலைப்பிரதேசமான ரங்கமாதியில் அதிகபட்சமாக 36 பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளதாகவும், பந்தர்பான் மற்றும் சிட்டகாங்கில் 17 பேர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இரு ராணுவ வீரர்களும் அடங்குவர். பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறை, ராணுவம் உள்ளிட்டோர் தீவிர மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக 25 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது இயற்கை சீற்றத்திற்கு 53 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற பீதி எழுந்துள்ளதால் பாதுகாப்பு மற்றும் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.