லாஸ்வேகாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு- 527 பேர் படுகாயம்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
லாஸ்வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது. 527 பேர் கடுகாயமடைந்துள்ளனர்.
லாஸ்வேகாஸ் நகரில் உள்ள ஹோட்டலில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஆட்டம்பாட்டத்துடன் இசை நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது இசை நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டலின் எதிரே இருந்த மற்றொரு ஹோட்டலின் 32வது மாடியில் இருந்து முதியவர் ஒருவர் சரமாரியாக கூட்டதை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டார். இதையடுத்து இசை நிகழ்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.
சுதாரிப்பதற்குள் பலி
என்ன நடக்கிறது என மக்கள் சுதாரிப்பதற்குள் குண்டடிபட்டு பலர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்ச்சியில் மரண ஓலம்
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டால் பீதியடைந்த மக்கள் நாலாபுறம் சிதறி ஓடினர். இதனால் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் மரண ஓலம் கேட்க தொடங்கியது.
நவீன ரக துப்பாக்கிகள் பறிமுதல்
துப்பாக்கிகுண்டுகள் வந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்ததில் அங்கு 42 நவீன ரக துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்த அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பல வெடிக்கும் பொருட்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
முதியவரின் கொலைவெறி
இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்தியவர் 64 வயதான ஸ்டீபன் பேட்காக் என போலீசார் உறுதி செய்துள்ளனர். இவரைத் தவிர வேறு யாரும் இந்த நாச வேலையில் ஈடுபடவில்லை எனவும் என்பதையும் போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
உலக நாடுகள் கண்டனம்
இச்சம்பவத்திற்கு கடும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பல உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் மவுன அஞ்சலி செலுத்தினார்.
விளக்குகளை அணைத்து அஞ்சலி
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லாவேகாஸ் நகரின் தெருக்களில் விளக்குகள் அணைக்கப்பட்டன. லாஸ்வேகாஸ் மாகாணம் முழுவதும் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நவேடா பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், லாஸ்வேகாஸ் மேயர் உள்ளிட்டோர் அங்குள்ள சிட்டி ஹாலுக்கு வெளியே கூடி மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்
லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘லாஸ் வேகாஸில் தாக்குதல் நடத்தியவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் மதம் மாறினார்'' என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்றில் கொடூரமானது
அமெரிக்க வரலாற்றில் லாஸ்வேகாஸ் தாக்குதல் கொடூரமான ஒன்று என கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.