பெரும் வெற்றி.. ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரையும் கைப்பற்றியது ராணுவம்!
பாக்தாத்: ஈராக்கிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கடைசி ஆதிக்க பகுதிகளையும் ராணுவம் மீட்டெடுத்துள்ளது.
ஈராக், சிரியா மற்றும் துருக்கியில் அரசு படைகளை எதிர்த்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.
இம்மூன்று நாடுகளில் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடங்களை இணைத்து தனிநாடு உருவாக்குவதே தீவிரவாதிகள் இலக்கு. இந்த இலக்கிற்காக அவர்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கிலுள்ள ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாடு பகுதிகள் அனைத்தும் ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றி வருகிறது. கடைசியாக சிரியா எல்லையை ஒட்டிய ரவா நகரம் மட்டும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்நிலையில், இன்று ரவா நகரில் அதிரடி தாக்குதல் நடத்தி அந்நகரை ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
ரவா நகர பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் ஈராக்கின் கொடி பறக்கவிடப்பட்டது என ஈராக் ராணுவ தளபதி அப்தெல்அமிர் யாரல்லா அறிவித்துள்ளார்.
ஜூலை மாதம் மொசூல் நகரை ஈராக் ராணுவம் கைப்பற்றியது, உள்நாட்டு போரில், முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. அமெரிக்க ராணுவமும், ஈராக்கிற்கு உதவிகள் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.