மறைந்த சவுதி மன்னரின் ரகசிய மனைவிக்கு ரூ.151 கோடி, 2 வீடுகள் அளிக்க யு.கே. கோர்ட் உத்தரவு
லண்டன்: மறைந்த சவுதி மன்னர் ஃபஹதின் ரகசிய மனைவிக்கு ரூ.151 கோடி ரொக்கமும், லண்டனில் இரண்டு சொகுசு வீடுகளும் அளிக்க சவுதி இளவரசர் அப்துல் அஜீஸுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் பிறந்து இங்கிலாந்தில் வசித்து வருபவர் ஜனன் ஹர்ப்(68). அவர் சவுதி இளவரசர் அப்துல் அஜீஸிடம் இருந்து அவர் வாக்களித்தபடி ரொக்கம் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கிக் கொடுக்குமாறு வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
மறைந்த சவுதி மன்னர் ஃபஹதுக்கும் எனக்கும் 1968ம் ஆண்டு ரகசியமாக திருமணம் நடைபெற்றது. அப்போது அவர் சவுதி இளவரசராக இருந்தார். நான் ஒரு கிறிஸ்தவ பெண் என்பதால் எங்கள் திருமணத்திற்கு அவரின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நான் திருமணத்திற்கு முன்பு இஸ்லாத்திற்கு மாறிவிட்டேன். என் வாழ்நாள் முழுவதும் என் பணத்தேவையை பார்த்துக் கொள்வதாக ஃபஹத் வாக்களித்தார்.
இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரின் மற்றொரு மனைவிக்கு பிறந்த இளவரசர் அப்துல் அஜீஸ் லண்டன் வந்தார். அவர் லண்டனில் உள்ள டார்செஸ்டர் ஹோட்டலில் வைத்து என்னை சந்தித்து பேசினார். அப்போது அவர் எனக்கு பணமும், லண்டனில் சொகுசு வீடுகளையும் வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
அவர் வாக்களித்தபடி பணம் மற்றும் சொத்துக்களை அளிக்குமாறு அவருக்கு உத்தரவிடுங்கள் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
ஜனனுக்கு தான் வாக்குறுதி அளிக்கவில்லை என்று இளவரசர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். ஆனால் நேரில் ஆஜராகி அதை நிரூபிக்கத் தவறிவிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் இளவரசர் அஜீஸ் ஜனனுக்கு ரூ.151 கோடி ரொக்கம் மற்றும் லண்டனில் இரண்டு சொகுசு வீடுகளை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவமதித்ததற்காக இளவரசர் ரூ. 25 லட்சம் ரொக்கத்தை தானம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.