அடங்கப்பா... நிலவில் ஒரு லட்சம் பள்ளமா... சீனாவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
பெய்ஜிங்: நிலவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள சீனா, இது சூரிய குடும்பம் குறித்த தெளிவான வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் என்றும் தெரிவித்துள்ளது.
நமது பூமியின் துணைக் கோளான நிலவு குறித்து பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் நிலவு குறித்து அறிந்துகொள்ள பல்வேறு செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது
சீனாவின் இரண்டு செயற்கைக்கோள்
சீனா நிலவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள சாங் 1 மற்றும் சாங் 2 என இரண்டு செயற்கைக்கோள்களை முறையே 2007 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் நிலவுக்கு அனுப்பியது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் தற்போது நிலா குறித்த பல்வேறு புதிய தகவல்களை அனுப்பியுள்ளது.
ஒரு லட்சம் பள்ளங்கள்
நிலவின் மேற்பரப்பு முழுவதும் பள்ளங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதுவரை நிலவில் சுமார் 1411 முதல் 7895 பள்ளங்கள் மட்டுமே இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், சீனாவின் இந்த புதிய செயற்கைக்கோள்கள் இதுவரை 1,09,956 புதிய பள்ளங்களை அடையாளம் கண்டுள்ளன.
சாங் 5 இன் சாதனை
இந்தாண்டு நிலவு குறித்த ஆராய்ச்சிக்காகச் சீனா சாங் 5 என்ற செயற்கைக்கோளை ஏவியது. இம்மாத தொடக்கத்தில் சாங் 5 நிலவில் தரையிறங்கியது. அங்கிருந்த சில பாறைகளைச் சேகரித்து பூமிக்குத் திரும்பியது. அந்த பாறைகளைக் குறித்து சீனா ஆய்வாளர்கள் தற்போது ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆய்வுக்கான காரணம் என்ன
இது குறித்து சீனா ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "நிலவில் இருக்கும் பள்ளங்கள் குறித்த துல்லியமான தரவுகளை அளிக்கவே இந்த ஆய்வை மேற்கொண்டோம். கடந்த 60 ஆண்டுகளில் நாசாவின் அப்பல்லோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு திட்டங்கள் மூலம் நிலவில் இருக்கும் பள்ளங்கள் குறித்த தரவுகளை டிஜிட்டல் முறையில் நாம் சேமித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
300 கோடி ஆண்டுகள் பழமையானவை
இருப்பினும், நிலவில் சரியாக எத்தனை பள்ளங்கள் உள்ளன என்பதைக் கணக்கிடுவதில் பல சவால்கள் உள்ளன. கடந்த 1919ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிலவில் 9,137 பள்ளங்களை உள்ளதாகச் சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) அங்கீகரித்துள்ளது. அவற்றில் 1675 பள்ளங்களின் உருவாக்கம் மற்றும் வயது குறித்த தகவல்களைச் சந்திர மற்றும் கிரக நிறுவனம் (எல்பிஐ) கடந்த 2015 இல் வெளியிட்டது. பூமியைப் போல அங்குக் காற்று, நீர் என எதுவும் இல்லாததால், நிலவில் இருக்கும் 99% பள்ளங்கள் சுமார் 300 கோடி ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.