5 நிமிடத்தில் 10 முறை எச்சரிக்கை விடுத்த பின் ரஷ்யா விமானத்தை வீழ்த்தினோம்: ஐ.நா.விடம் துருக்கி
அங்காரா: தங்களது வான்பரப்பில் ஊடுருவிய ரஷ்யா விமானங்களுக்கு 10 முறை எச்சரிக்கை விடுத்த பின்னரே சுட்டு வீழ்த்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்கி மூன் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலிடம் துருக்கி விளக்கம் கொடுத்துள்ளது.
சிரியா-துருக்கி வான்பரப்பில் பறந்த ரஷ்யா போர் விமானம் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டது. முதலில் சுட்டு வீழ்த்தப்பட்டது எந்த நாட்டு விமானம் எனத் தெரியாமல் இருந்தது. பின்னர் ரஷ்யா, தங்களது போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து துருக்கியுடனான ராணுவ ஒத்துழைப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலர் பான்கிமூன் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்த சம்பவம் தொடர்பாக துருக்கி விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இந்த விளக்க கடிதத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
Turkey's statement: Claims Russia violated airspace for just "17 seconds" with very slow 243 miles/hour jet. pic.twitter.com/knhdy0RWIA
— WikiLeaks (@wikileaks) November 24, 2015
அதில், 2 சுகோய்-24 ரக விமானங்கள் துருக்கி வான்பரப்புக்குள் நுழைந்தன. அப்போது 5 நிமிட இடைவெளியில் 10 முறை அவசர எச்சரிக்கையை விடுத்து துருக்கி வான்பரப்பை விட்டு வெளியே செல்லுமாறு எச்சரித்தோம். ஆனால் இந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் துருக்கி வான்பரப்புக்குள் 19 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானங்கள் ஊடுருவின.
அப்போது ஒரு விமானம் துருக்கி வான்பரப்பை விட்டு வெளியேறியது. 17 வினாடிகள் துருக்கி வான்பரப்பில் பறந்த மற்றொரு விமானத்தை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துருக்கியின் எஃப்-16 ரக போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தின. அந்த விமானம் சிரியா- துருக்கி எல்லையில் சிரியா பகுடிக்குள் விழுந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் துருக்கி வான்பரப்புக்குள் தங்களது விமானங்கள் ஊடுருவவில்லை; சிரியா வான்பரப்பில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் மற்றும் இதர தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நிலையில் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.