ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற 51.9% பேர் ஆதரவு-தொடர்ந்து நீடிக்க 48.1% பேர் ஆதரவு
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேற 51.9% பேரும் தொடர்ந்து நீடிக்க 48.1% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகி உள்ளது.
28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனும் அங்கம் வகிக்கிறது. இதில் பிரிட்டன் தொடர்ந்து இணைந்திருக்கலாமா அல்லது அமைப்பிலிருந்து விலகிவிடலாமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
பிரெக்ஸிட் என அழைக்கப்படும் இந்த விலகல் குறித்த பொது வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக 4.65 கோடி வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். மொத்தம் 72.2% பேர் வாக்களித்திருந்தனர்.
இவ்வாக்கெடுப்பின் தொடக்கத்தில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற தரப்பு பின் தங்கியிருந்தது. ஆனால் பின்னர் குறைவான வாக்குகளுடன் வெளியேற வேண்டும் என்கிற தரப்பு முன்னிலை வகித்தது.
இங்கிலாந்து, வேல்ஸ் ஆகியவை பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக அதிக அளவு வாக்குகளை அளித்திருக்கின்றன.
ஆனால் ஸ்காட்லாந்து வட அயர்லாந்து ஆகியவை பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்கவேண்டும் என்ற தரப்புக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன.
அனைத்து மையங்களின் வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில்
1,74,10,742 பேர் (51.9%) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் எனவும்
1,61,41,241 பேர் (48.1%) ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகி உள்ளன. இதனை நடைமுறைப்படுத்த ஓரிரு ஆண்டுகள் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.