செளதி நிதி உதவி... '3 பில்லியன் டாலர்' பிரான்ஸ் ஆயுதங்களை பெற்றது லெபனான்!!
பெய்ரூட்: லெபனானுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரான்ஸ் ஆயுதங்கள் சென்றடைந்துள்ளன. தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் லெபனானுக்கு உதவும் வகையில் இந்த ஆயுதங்களை வாங்க செளதி அரேபியா நிதி உதவி செய்துள்ளது.
அண்டை நாடான சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் மற்றும் சிரியாவின் அல்கொய்தா இயக்கமான நுஸ்ரா முன்னனி ஆகியவை லெபனானுக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் லெபனானுக்கு 3 பில்லியன் டாலர் உதவி அளிப்பதாக செளதி அரேபியா அறிவித்தது.
இதனடிப்படையில் பிரான்சிடம் இருந்து முதல் கட்டமாக டாங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் லெபனானை வந்தடைந்துள்ளன. இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் லெபனான் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் யுவெஸ் லி டிரியன், கவச வாகனங்கள், டாங்கிகள், 6 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட இந்த ஆயுதங்கள் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. 2வது கட்டமாக மே மாதத்தில் பிற ஆயுதங்கள் வழங்கப்படும் என்றார்.
லெபனான் பாதுகாப்பு அமைச்சர் சமீர் மொக்பெல் பேசுகையில், பயங்கரவாதத்துக்கு எதிரான லெபனானின் வெற்றியானது பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள பிற நாடுகளின் வெற்றியாகும் என்றார்.