சிங்கப்பூர் சிற்பி லீ குவான் யூ மரணமடைந்ததாக இணையதளத்தில் வதந்தி.. மக்கள் அதிர்ச்சி
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சிற்பி, தந்தை என போற்றப்படும் முன்னாள் பிரதர் லீ குவான் யூ (91) மரணமடைந்து விட்டதாக இணையதளத்தில் பரவிய செய்தியால் சிங்கப்பூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
மலேசியாவிலிருந்து பிரிந்த நாடுதான் சிங்கப்பூர். பிரிவினைக்குப் பின்னர் சிங்கப்பூரை உலகத் தரம் வாய்ந்த அபாரமான வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றிய பெருமை யூவுக்கே உண்டு. சிங்கப்பூர் மாடல் என்று பல நாடுகளும் சிங்கப்பூரைப் பார்த்து பிரமிக்க வைத்தது லீ குவான் யூவின் ஆட்சி.
கடந்த சில நாட்களாக நுரையீரல் சுழற்சி நோயினால் லீ அவதிப்பட்டு வருகிறார். பிப்ரவரி 5ம் தேதியிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்தில் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. பின்னர் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு அவர் மரணம் அடைந்து விட்டதாக செய்தி வெளியானது. அந்த செய்தியை சிங்கப்பூரில் இயங்கும் ஒரு இணையதளம் வெளியிட்டது. அதை பின்பற்றி பலரும் செய்தி போட்டி விட்டனர்.
ஆனால், இதை சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் உடனடியாக மறுத்தது. லீ மரணம் அடையவில்லை என செய்தி வெளியிட்டது. மேலும் இந்த வதந்தி பரப்பியவர்கள் யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசுக்கும் உத்தரவிட்டுள்ளது.