வெளியாகிறது ரகசிய கடிதங்கள்... ஒபாமாவின் வேறொரு முகத்தை உலகம் பார்க்கப்போகிறது!
ஒபாமா தன்னுடைய கல்லூரி காலத்தில் காதலித்த பெண்ணுக்கு எழுதிய கடிதங்கள் எல்லாம் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது.
வாஷிங்டன்: ஒபாமா தன்னுடைய கல்லூரி காலத்தில் காதலித்த பெண்ணுக்கு எழுதிய கடிதங்கள் எல்லாம் மக்களின் பார்வைக்கு வைக்கப் பட இருக்கிறது. இவர் தன்னுடைய முதல் காதலிக்கு கல்லூரி காலத்தில் மட்டும் மொத்தம் 9 கடிதங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை 1980 களில் எழுதப்பட்ட கடிதங்கள் ஆகும்.
ஒபாமா கல்லூரி படித்த காலத்தில் தன்னுடைய காதலி அலெக்ஸ்சாண்ட்ரா என்ற பெண்மணிக்கு நிறைய கடிதங்கள் எழுதி இருக்கிறார். இந்தக் கடிதங்களில் அவர் எப்படியெல்லாம் அந்தப் பெண்ணை காதலிக்கிறார் என்பதை உருகி உருகி வர்ணித்து இருக்கிறார். தற்போது இந்தக் கடிதங்கள் எல்லாம் மக்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட இருக்கின்றன.
அவர் எழுதிய பல கடிதங்களில் 9 கடிதங்கள் மட்டுமே காதல் கடிதங்கள் ஆகும். அவை மட்டும் 30க்கும் அதிகமான பக்கங்கள் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவை அனைத்தும் அட்லாண்டா பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது. இதற்கான அனுமதியை ஒபாமா தனது குடும்பத்துடன் கலந்து பேசி வழங்கி இருக்கிறார்.
மேலும் இந்தக் கடிதங்களில் அவர் பட்ட பொருளாதார கஷ்டங்கள், அவர் கறுப்பின ஆணாக இருந்ததால் பட்ட துயரங்கள், அவர் அடைந்த தோல்விகள், தோற்றுப் போன காதல்கள் என் அனைத்தையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இது அவரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த தகவல் வந்ததில் இருந்து நிறைய பேர் ஒபாமாவை வைத்து ஆய்வுக் கட்டுரைகள் எழுத முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த ஒபாமா எப்படியெல்லாம் மேல எழுந்து வந்து கடைசியில் அமெரிக்க அதிபர் ஆனார் என்பது இந்தக் கடிதங்கள் மூலம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.