நடந்து போங்க பாஸூ... மோட்டார் சைக்கிள் ‘டாக்ஸி’ ஓட்டினா அபராதம்: லைபீரிய அரசு அதிரடி
மொன்ரோவியா: மோட்டார் சைக்கிளை டாக்ஸியாகப் பயன் படுத்துவதைத் தடுக்கும் வகையில், புதிய அபராதத்துடன் கூடிய தடையை விதித்துள்ளது லைபீரிய அரசு.
நம்மூரில் கிண்டலுக்காகச் சொல்வார்கள், ‘இவர் டூ வீலருக்கே டிரைவர் வச்சுப்பார்' என. ஆனால், இதனை உண்மையாக்கி இருக்கிறார்கள் லைபீரியா மக்கள்.
இங்குள்ள மக்கள் மோட்டார் சைக்கிளை ‘டாக்ஸி'யாகப் பயன் படுத்தி வருகிறார்களாம். தற்போது அதனைத் தடுக்கும் வகையில் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது அந்நாட்டு அரசு.
டாக்ஸிக்களான மோட்டார்சைக்கிள்...
ஆப்பிரிக்க நாடுகளின் பல நகரங்களிலும், லைபீரியாவின் தலைநகரான மொன்ரோவியாவிலும் தனியாருக்கு சொந்தமான மோட்டார்சைக்கிள்களை டாக்சிகளாகப் பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.
ஓவர் லோடு....
பொதுவாக இரண்டு பேரை ஏற்றிச் செல்லும் வண்டிகளில் கூட அவர்கள் ஐந்து பேரை ஏற்றிச் செல்லுகின்றனர்.
அதிகரிக்கும் விபத்துக்கள்...
இதனால் விபத்துக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாகத் தெரிய வந்துள்ளதையடுத்து, லைபீரிய அரசு இத்தகைய மோட்டார்சைக்கிள் டாக்சிகளை தலைநகரில் ஓட்டுவதற்கு தடை விதித்துள்ளது.
நடந்து போங்கப்பா...
இதுபோல் மொத்தமாக வண்டிகளில் ஏறிக்கொண்டு செல்லுவதைவிடுத்து பணிக்கு செல்லுபவர்களை நடந்து செல்லுமாறு அரசு குறிப்பிட்டுள்ளது. காவல்துறையினரும் முக்கிய சந்திப்புகளில் தடைகள் ஏற்படுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பறிமுதல்...
தலைநகரின் மையப்பகுதியிலோ முக்கிய சாலைகளிலோ மோட்டார்சைக்கிள் டாக்சிகள் செயல்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வாகனத்தின் உரிமையாளருக்கு 200 டாலர் அபராதம் விதிக்கப்படும் என முதலில் அந்நாட்டு அரசு வானொலியில் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருந்தது.
தவறான அறிவிப்பு....
அதன்பின்னர் 20 டாலர் அபராதம் என்பது தவறுதலாக 200 டாலர் என்று அறிவிக்கப்பட்டு விட்டதாக காவல்துறையின் தகவல் அதிகாரியான சாம் கொலின்ஸ் பிபிசி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.